வட கொரியாவிடம் 80 முதல் 120 அணு ஆயுதங்கள் இருக்கலாம் என தென் கொரியா பாதுகாப்பு அமைச்சர் ஆன் கியூ-பேக் நாடாளுமன்றத்தில் கூறியதால், உலகளவில் அதிர்ச்சி உருவாகியுள்ளது. தனியார் ஆராய்ச்சி நிறுவன மதிப்பீடுகளை அடிப்படையாகக் கொண்ட இந்த தகவல், ட்ரம்ப் முன்பு கூறிய 57 என்ற எண்ணிக்கையை விட இருமடங்கு அதிகம் என்பதால், அமெரிக்கா-தென்கொரியா கூட்டணியிலும் பதற்றம் அதிகரித்துள்ளது.
வட கொரியாவுக்கு 'விரோதமானது' என்றுகூறி தென்கொரியா உடனான கூட்டு ராணுவ பயிற்சிகளை குறைக்க ட்ரம்ப் உத்தரவிட்டிருப்பதை தொடர்ந்து, 73 ஆண்டுகளாக இருந்துவரும் பழையான கூட்டணியில் விரிசல் விழுந்ததா என்ற கேள்வி எழுந்துள்ளது. இதற்கிடையில் வட கொரியா தலைவர் கிம் ஜாங் உன்னை சந்திக்கவிருப்பதாக ட்ரம்ப் கூறியிருப்பதும், தென்கொரிய தலைநகர் சியோலில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
இச்சூழலில் வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களுடனான ஒரு திடீர் சந்திப்பின்போது பேசிய ட்ரம்ப், வட கொரிய தலைவர் கிம் ஜாங்-உன்னுடன் கடிதப் பரிமாற்றம் செய்கிறீர்களா என்ற கேள்விக்கு ’இல்லை’ என மறுக்காமல் ‘அதை உங்களுக்கு என்னால் சொல்ல முடியாது’ என்று தெரிவித்தார். மேலும், வடகொரியாவிடம் மிகவும் சக்திவாய்ந்த 57 அணு ஆயுதங்கள் இருப்பதாக கூறிய ட்ரம்ப், இதை நடக்க ஒருபோதும் அனுமதித்திருக்கக் கூடாது என்றும் தெரிவித்தார். 57 என்ற எண்ணிக்கை எதன் அடிப்படையில் தெரிந்தது என்று டிரம்ப் கூறவில்லை.
ஆனால் ட்ரம்ப் சொன்னதை விட இரண்டு மடங்கு அணு ஆயுதங்கள் வடகொரியாவிடம் இருப்பதாகவும், அந்த எண்ணிக்கை எப்படி தெரியவந்தது என்பதற்கான தகவலையும் வெளிப்படுத்திய தென் கொரியா பகீர் கிளப்பியுள்ளது.
வட கொரிய தலைவர் கிம்மிடம் 57 அணு ஆயுதங்கள் உள்ளதா என்ற கேள்விக்கு பதிலளித்த தென் கொரியா பாதுகாப்பு அமைச்சர் ஆன் கியூ-பேக், “அவர்களிடம் சுமார் 80 முதல் 120 வரையிலான அணு ஆயுதங்கள் இருக்க வாய்ப்புகள் உள்ளது. எண்ணிக்கையை துல்லியமாக உறுதிப்படுத்துவது கடினம் என்றாலும், இத்தகவல் தனியார் ஆராய்ச்சி நிறுவனங்களின் மதிப்பீடுகளிலிருந்து பெறப்பட்டது என்று நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் ஆன் கூறியுள்ளார்.
அதேநேரம் வட கொரியாவை அணு ஆயுதம் ஏந்திய நாடாக அரசு அங்கீகரிக்கிறதா என்று கேள்விக்கு, "அதை எங்களால் அதிகாரப்பூர்வமாக ஒப்புக்கொள்ள முடியாது" என்று அவர் எந்த நிலைப்பாட்டையும் எடுக்காமல் மறுத்துவிட்டார்.
வட கொரியாவிடம் அணு ஆயுதங்கள் இருக்கிறது என்பதை தென்கொரியா வெளிப்படுத்துவது இது முதன்முறை அல்ல, இதற்கு முன்பும் 2000 கிலோ யுரேனியம் வடகொரியாவிடம் உள்ளது என்றும், அதை வைத்து குறைந்தது 50 அணு ஆயுதங்கள் செய்யலாம் என்றும் தென்கொரியா குற்றச்சாட்டியிருந்தது. ஆனால் தற்போது அந்த எண்ணிக்கையை இரண்டு மடங்காக தென் கொரியா கூறியிருப்பது உலக நாடுகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.