யூன் சுக் இயோல் எக்ஸ் தளம்
உலகம்

தென் கொரியா | அதிபர் இயோல் பதவி நீக்கம்.. நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

தென் கொரிய அதிபர் யூன் சுக் இயோலை பதவி நீக்கம் செய்து, அந்நாட்டு நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.

Prakash J

தென் கொரியாவின் அதிபராக இருந்த யூன் சுக் இயோல், கடந்த ஆண்டு டிசம்பர் 3ஆம் தேதி, நாட்டுமக்களிடம் உரையாற்றியபோது, அவசரநிலை ராணுவச் சட்டத்தை அமல்படுத்துவதாக அறிவித்தார். இதற்கு எதிர்ப்பு எழுந்தது. தொடர்ந்து அவருக்கு எதிராக எதிர்க்கட்சிகள் நாடாளுமன்றத்தில் பதவிநீக்க தீர்மானத்தைக் கொண்டு வந்தன. டிசம்பர் 14ஆம் தேதி இதற்கான வாக்குப்பதிவு தோல்வியில் முடிந்தாலும், 27ஆம் தேதி நடைபெற்ற வாக்குப்பதிவில் அவருக்கு எதிராக ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதையடுத்து அவர் பதவி நீக்கம் செய்யப்பட்டார். இதனைத் தொடர்ந்து, அவர் கைது செய்யப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டார். இதன்மூலம் கைது செய்யப்பட்ட முதல் தென் கொரிய அதிபர் ஆனார்.

யூன் சுக் இயோல்

எனினும், இதுதொடர்பான வழக்கு அந்நாட்டு நீதிமன்றத்தில் நடைபெற்றது. இந்த நிலையில் இவ்வழக்கில் தீர்ப்பளித்த நீதிமன்றம், தென் கொரிய அதிபர் யூன் சுக் இயோலை பதவி நீக்கம் செய்து அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. இராணுவச் சட்டத்தை அறிவித்ததன் மூலம் அவர் அடிப்படை உரிமைகளை மீறியதாகக் கூறி தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இதை எதிர்க்கட்சியினர் கொண்டாடி வருகின்றனர். மறுபுறம், இத்தீர்ப்பு வழங்கப்பட்டிருப்பதை அடுத்து, விரைவில் அங்கு தேர்தல் நடத்தப்படலாம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.