தென்கொரிய பாதுகாப்பு அமைச்சகத்தின் தகவல்களையும், முக்கியமான ராணுவ ரகசியங்களையும் வடகொரியா திருடிவிட்டதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது.
தென்கொரியாவின் போர்த் திட்டங்கள் தொடர்பான முக்கிய தகவல்களை வடகொரிய ஹேக்கர்கள் திருடி விட்டதாக புகார் எழுந்துள்ளது. இந்தத் தகவலை உறுதி செய்துள்ள தென்கொரியாவின் ஆளும் ஜனநாயக கட்சி எம்.பி.யான ரீ சீயோல் ஹீ, தென்கொரியா மற்றும் அமெரிக்கா இடையிலான போர் பயிற்சி திட்டங்கள், வடகொரியத் தலைமையை பணிய வைப்பதற்கான உத்திகள் அடங்கிய ஆவணங்கள் திருடு போயிருப்பதாக தெரிவித்துள்ளார். மொத்தமாக 235 ஜி.பி அடங்கிய தகவல்களை வடகொரியாவைச் சேர்ந்த ஹேக்கர்கள் திருடி இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார். ரீ சீயோல் வெளியிட்ட இந்தத் தகவல் குறித்து அமெரிக்காவின் பென்டகன் அதிகாரிகள் கருத்து கூற மறுத்துவிட்டனர். அதே சமயம் வடகொரியாவின் எந்தவொரு அச்சறுத்தலையும் சமாளிக்கக் கூடிய அளவுக்கு, அமெரிக்காவின் ராணுவ திட்டங்கள் வெளியே கசியாமல் பாதுகாப்பாக இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.