உலகம்

ஆபத்தான நிலையில் சில நாடுகள்: உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை

ஆபத்தான நிலையில் சில நாடுகள்: உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை

JustinDurai
பல்வேறு நாடுகளில் கொரோனா பரவல் அதிவேகமாக அதிகரித்துள்ளது என்று உலக சுகாதார அமைப்பு கவலை தெரிவித்துள்ளது.
 
ஜெனீவாவில் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய உலக சுகாதார அமைப்பின் இயக்குனர் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ் கூறுகையில், ''அடுத்த சில மாதங்கள் மிகவும் கடினமாக இருக்கும், சில நாடுகள் ஆபத்தான பாதையில் செல்கின்றன. நாம் கொரோனாவிற்கு எதிரான போரில், குறிப்பாக வடக்கு அரைக்கோளத்தில் உள்ள நாடுகள் ஒரு முக்கியமான கட்டத்தில் இருக்கின்றன.
 
அநாவசியமான மரணங்களை தடுக்கவும், அடிப்படை சுகாதார சேவைகளின் வீழ்ச்சியை நிறுத்தவும், பள்ளிகள் மீண்டும் மூடப்படாமல் இருக்கவும், உடனடியாக தகுந்த நடவடிக்கைகளை எடுக்கும்படி, வடக்கு ஐரோப்பிய நாட்டு தலைவர்களை கேட்டுக்கொள்கிறேன்.
 
வைரஸ் பரவுவதை விரைவாகக் கட்டுப்படுத்த உலக நாடுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். பரிசோதனை மேம்படுத்துதல், பாதிக்கப்பட்டவர்களின் தொடர்புகளைக் கண்டறிதல் மற்றும் வைரஸ் பரவும் அபாயத்தில் உள்ளவர்களை தனிமைப்படுத்துதல் ஆகியவற்றை தடையின்றி தொடர வேண்டும்’’ என்றார்.