உலகம்

கழிவறையில் வீடியோ கேம் விளையாடும்போது கடித்த மலைப்பாம்பு! மலேசியாவில் அதிர்ச்சி சம்பவம்!

ச. முத்துகிருஷ்ணன்

கழிவறையைப் பயன்படுத்தும்போது வீடியோ கேம் விளையாடிக் கொண்டிருந்த 28 வயது இளைஞனின் பின்பக்கத்தில் மலைப் பாம்பு கடித்த அதிர்ச்சி சம்பவம் மலேசியாவில் அரங்கேறியுள்ளது.

மலேசியாவை சேர்ந்த 28 வயது இளைஞர் சப்ரி தசாலி. தினமும் கழிவறையை பயன்படுத்தும்போது தனது மொபைல் சாதனத்தில் வீடியோ கேம் விளையாடுவதை வழக்கமாக வைத்துள்ளார் தசாலி. 15 நிமிடங்கள் வரை கழிவறையில் இருந்தபடி கேம் விளையாடுவது அவரது வழக்கம். அதேபோல் மார்ச் 28 அன்று வீடியோ கேம் விளையாடும்போது அதிர்ச்சி சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளது.

மலைப்பாம்பு ஒன்று தனது பின்பக்கத்தில் கடிப்பதுபோல ஒட்டிக்கொண்டதைக் கண்டு அதிர்ச்சியுடன் எழுந்து நின்றார் தசாலி. பீதியடைந்து பாம்பையும் இழுத்துக்கொண்டு குளியலறையை விட்டு வெளியே ஓடினார். பாம்பைப் பிடித்து இழுத்து தன்னைக் காப்பாற்றியுள்ளார் தசாலி. அவர் உடனடியாக அருகில் உள்ள தீயணைப்பு மற்றும் மீட்புத் துறைக்கு போன் செய்தார். அதைத் தொடர்ந்து பாம்பு, மலைப்பாம்பு பிடிக்கப்பட்டது.

மலைப்பாம்பு விஷம் இல்லாத பாம்பு என்றும், கடித்ததில் வலி இல்லை என்றும் தெரிந்த பின்பு தசாலி நிம்மதியடைந்துள்ளார். உடனடியாக மருத்துவமனைக்குச் சென்ற தசாலிக்கு டெட்டனஸ் எதிர்ப்பு ஊசி போடப்பட்டுள்ளது. தனது குடும்பம் 40 வருடங்களாக வசித்து வரும் தனது வீட்டுப் பகுதியில் இதுபோன்ற சம்பவம் நடப்பது இதுவே முதல் முறை என்று தசாலி கூறினார்.

இரண்டு வாரங்களுக்குப் பிறகு பாம்பு தனது பின்பக்கத்தில் பற்களின் துண்டுகளை விட்டுச் சென்றதை தசாலி கண்டுபிடித்தார். “நான் பாம்பை பலமாக இழுத்ததால் பற்கள் உடைந்திருக்கலாம்,” என்று மலேசிய ஊடகத்திடம் தசாலி கூறினார். தனக்கு நேர்ந்த இந்த அதிர்ச்சி அனுபவத்தை தனது ட்விட்டர் பக்கத்தின் மூலம் பகிர்ந்துள்ளார் தசாலி.

“இந்த சம்பவம் என் வாழ்வின் ஒரு துரதிர்ஷ்டவசமான தருணம். இது மார்ச் மாதம் நடந்தது. சம்பவம் நடந்து கிட்டத்தட்ட இரண்டு மாதங்கள் ஆன போதிலும், அதிர்ச்சியில் இருந்து மெல்ல மெல்ல தற்போது தான் மீண்டு வருகிறேன். சுமார் இரண்டு வாரங்கள் என் வீட்டில் கழிப்பறையைப் பயன்படுத்தவில்லை, அதற்கு பதிலாக உள்ளூர் மசூதியின் கழிப்பறையைப் பயன்படுத்தினேன்” என்று குறிப்பிட்டுள்ளார் தசாலி.