உலகம்

5000 ஆண்டுகளுக்கு முன்பே அறுவைசிகிச்சையா? மிரள வைத்த பழங்கால மண்டை ஓடு!

Sinekadhara

பழங்காலத்தில் அதாவது 5000 ஆண்டுகள் பழமையான, அறுவைசிகிச்சைக்கு சென்று இறந்த ஒரு நபரின் மண்டை ஓட்டை ரஷ்ய தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

வெண்கல காலத்தில் வாழ்ந்த 20 வயது நபருக்கு அறுவைசிகிச்சை நடைபெற்றிருக்கும் தடயங்களை கிரிமியா வெளியிட்டுள்ள 3டி புகைப்படங்கள் காட்டுகின்றன. இந்த அறுவைசிகிச்சை வெற்றியடையாததால் துர்திர்ஷ்டவசமாக அந்த நோயாளி ’ஸ்கல்பெல்’ நடைபெற்ற குறுகிய காலத்திலேயே உயிரிழந்திருக்கக் கூடும் என்றும் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் அறுவைசிகிச்சை செய்த மருத்துவர் கல்லால் ஆன அறுவைசிகிச்சை உபகரணங்களை வைத்திருந்திருக்கக் கூடும் என்றும் மாஸ்கோவின் ரஷ்ய அறிவியல் அகாடமி தொல்பொருள் நிறுவனம் குறிப்பிட்டுள்ளது. அறுவைசிகிச்சை செய்த அந்த மண்டைஓடு 140×125 மில்லிமீட்டர்கள் பரிமாணத்தில் நடைபெற்றிருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளது.

பழங்காலத்திலும் அறுவைசிகிச்சைக்குப் பிறகு உயிர்வாழும் வாய்ப்புகள் அதிகமாக இருந்தும்கூட இந்த இளைஞர் நீண்டநாள் வாழவில்லை என்று சூழ்நிலை மானுடவியல் ஆய்வகத்தின் தலைவர் டாக்டர் மரியா டோப்ரோவோல்ஸ்கியா கூறியுள்ளார். மேலும், குணமடைந்ததற்காக தடயங்கள் எதுவும் இல்லை எனவும், எலும்பின் மேற்பரப்பில் ட்ரபனேஷன் கருவியின் தடயங்கள் இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

சித்தியன் காலத்தைச் சேர்ந்த புதைகுழியில் இருந்து இந்த 5000 ஆண்டு பழமையான மண்டைஓடு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இறந்தவரின் எலும்பின் நிலையை வைத்து கவனித்துப் பார்த்தால், நேராகப் படுக்கவைத்த உடல் இடதுபக்கமாக சற்று திரும்பி இருக்கிறது, குறிப்பாக முழங்கால்கள் வளைந்து இடதுபக்கம் நன்கு திரும்பி இருக்கிறது என்றும், மேலும் பெரிய சிவப்புக்கறை தலைக்கு அருகிலும் மண்டை ஓட்டின்மீதும் காணப்பட்டது என்றும் அவர் கூறியுள்ளார்.

பண்டைய காலங்களில், கடுமையான தலைவலியைக் குறைக்க, ஒரு ஹீமாடோமாவைக் குணப்படுத்த, மண்டை ஓட்டின் காயங்களை சரிசெய்ய அல்லது கால்-கை வலிப்பை சரிசெய்ய மூளை அறுவைசிகிச்சையை மேற்கொண்டிருக்கலாம் என ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர். மேலும் வலியைக் குறைக்க கஞ்சா மற்றும் மேஜிக் காளான்களை மருந்துகளாகப் பயன்படுத்தியிருக்கக் கூடும் என்றும் ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.