பிரேசிலில் தோன்றிய மின்னல் வெட்டு, 700 கிலோ மீட்டர் தூரத்தைக் கடந்து புதிய சாதனை படைத்திருப்பதாக உலக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
பிரேசிலில் கடந்த 2018 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 31 ஆம் தேதி தோன்றிய மின்னல் ஒன்று உலக சாதனையைப் பதிவு செய்துள்ளது. கிட்டத்தட்ட 700 கிலோ மிட்டரை கடந்து இருப்பதாகச் சொல்லப்படும் இந்த மின்னல் தூரமானது அமெரிக்காவின் பாஸ்டன் நகரத்திலிருந்து வாசிங்டன் நகரத்திற்கு இடைப்பட்ட தூரத்திற்குச் சமமாக உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கடந்த 2007 ஆம் ஆண்டு ஜூன் 20 ஆம் தேதி அமெரிக்காவின் ஒக்லஹோமாவில் ஏற்பட்ட மின்னலே அதிக தூரத்தை அடைந்த மின்னல் எனச் சர்வதேச வானிலை மையத்தால் அங்கீகரிக்கப்பட்டிருந்தது. அது 321 கிலோ மீட்டர் வரை ஏற்பட்டிருந்தது. இந்நிலையில் அதனைவிட இரு மடங்கு அதிக தூரம் கொண்ட மின்னல் பிரேசிலில் ஏற்பட்டதையடுத்து இந்த புதிய சாதனை அறிவிக்கப்பட்டுள்ளது.