ராஜ் சிங்
ராஜ் சிங் twitter
உலகம்

அமெரிக்காவில் மீண்டும் பயங்கரம்: உ.பி. இசைக்கலைஞர் சுட்டுக் கொலை.. குடும்பத்தினர் கோரிக்கை!

Prakash J

உத்தரப்பிரதேச மாநிலம் பிஜ்னோர் மாவட்டத்தில் உள்ள தாண்டா சாஹுவாலா கிராமத்தைச் சேர்ந்தவர் கோல்டி என்கிற ராஜ் சிங். சீக்கிய பஜனைக் குழுவைச் சேர்ந்த இசைக்கலைஞர் மற்றும் பாடகரான இவர், தனது இசைக்குழுவினருடன் கடந்த ஓராண்டுக்கும் மேலாக, அமெரிக்காவில் தங்கி இருந்தார். இந்த நிலையில், கடந்த பிப்ரவரி 23ஆம் தேதி, அலபாமா மாநிலம், செல்மா நகரில் சீக்கிய வழிபாட்டுத் தலமான குருத்வாராவிற்கு ராஜ் சிங் சென்றிருந்தார். அப்போது அங்கு வந்த மர்ம நபர்கள், திடீரென அவரை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். இதில் அந்த சீக்கியர் பரிதாபமாக உயிரிழந்தார்.

அவரது திடீர் மரணம் அவரது குடும்பத்தினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது. சீக்கியர்கள் மீதான வெறுப்புணர்வினால் இந்த கொலை நடந்திருக்கலாம் என அவரது குடும்பத்தினர் கேள்வி எழுப்பியுள்ளனர்.

இந்த கொலை தொடர்பாக செல்மா போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களைத் தேடி வருகின்றனர். ராஜ் சிங்கின் உடலை இந்தியாவிற்கு கொண்டு வர உதவிசெய்யக் கோரி, பிரதமர் நரேந்திர மோடிக்கு அவரது குடும்பத்தினர் கடிதம் எழுதியுள்ளனர். சமீபகாலமாக அமெரிக்காவில் இந்தியர்களின் மரணம் அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.