ஷேக் ஹசீனா எக்ஸ் தளம்
உலகம்

வங்கதேசம் | தேர்தலில் ஷேக் ஹசீனா கட்சிக்குத் தடை? இடைக்கால அரசு முடிவு!

வங்கதேசத்தில் நடைபெறவிருக்கும் பொதுத் தோ்தலில் போட்டியிட, ஷேக் ஹசீனாவின் அவாமி லீக் கட்சி அனுமதிக்கப்படமாட்டாது என்று இடைக்கால அரசு தெரிவித்துள்ளது.

Prakash J

அண்டை நாடான வங்கதேசத்தில் இடஒதுக்கீட்டுக்கு எதிராக கடந்த ஆண்டு ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் மாணவர் அமைப்பினர், பொதுமக்கள் இணைந்து நடத்திய புரட்சி மிகப்பெரிய வன்முறையாக வெடித்தது. இதன் காரணமாக பிரதமர் பதவியில் இருந்து விலகிய ஷேக் ஹசீனா, இந்தியாவில் தஞ்சம் அடைந்தார். இதையடுத்து வங்கதேசத்தில் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டு, ராணுவத்தின் கண்காணிப்பில் அங்கு இடைக்கால அரசு அமைந்துள்ளது.

ஷேக் ஹசீனா

இந்த நிலையில் வங்கதேசத்தைவிட்டு ஷேக் ஹசீனா வெளியேறி 6 மாதங்கள் ஆகியுள்ள நிலையில், அந்நாட்டில் நடைபெற்ற வன்முறை தொடர்பாக அவர்மீது மட்டும் 150க்கும் மேற்பட்ட வழக்குகள் பதியப்பட்டுள்ளன. மேலும், அவாமி லீக் அரசாங்கத்திற்கு எதிராக இனப்படுகொலை மற்றும் மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்கள் எனக் கூறி டாக்காவை தளமாகக் கொண்ட சர்வதேச குற்றவியல் தீர்ப்பாயத்தில் (ICT) 30க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. முன்னதாக, வழக்குகள் தொடர்பாக ஷேக் ஹசீனா நீதிமன்றத்தை நாடினால், அவரை நாடு கடத்துவோம் என்று வங்கதேச இடைக்கால அரசாங்கம் தெரிவித்துள்ளது.

மேலும், ஷேக் ஹசீனா ஆட்சியில் ஏராளமானோர் வலுக்கட்டாயமாக காணாமல் ஆக்கப்பட்டதாக தகவல் வௌியாகி உள்ளது. இதனால் ஷேக் ஹசினா மீது ஏகப்பட்ட வழக்குகள் உள்ளதை அடுத்து, அவரை விசாரிக்க வேண்டும் என வங்கதேச இடைக்கால அரசு கூறி வருவதுடன், அவருக்கு எதிராக நீதிமன்றங்களில் கைது வாரண்ட்டும் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

sheikh hasina

இதற்கிடையே, “இந்தியாவிற்குத் தப்பிச் சென்ற ஷேக் ஹசீனாவை எங்களிடம் ஒப்படைக்க வேண்டும்” எனக் கோரி வங்கதேசத்தின் இடைக்கால அரசு பலமுறை கோரிக்கை வைத்து வருகிறது. எனினும், ஷேக் ஹசீனாவை வங்கதேசத்திடம் திருப்பி ஒப்படைக்கும் முடிவு தொடர்பாக இந்தியா இதுவரை எந்தப் பதிலும் தெரிவிக்காமல் உள்ளது. இதையடுத்து, ஷேக் ஹசீனாவின் பாஸ்போர்ட்டை வங்கதேச அரசு ரத்து செய்தது. ஆனால், அவரது விசா காலத்தை இந்தியா நீட்டித்துள்ளது.

இந்த நிலையில், வங்கதேசத்தில் நடைபெறவிருக்கும் பொதுத் தோ்தலில் போட்டியிட, ஷேக் ஹசீனாவின் அவாமி லீக் கட்சி அனுமதிக்கப்படமாட்டாது என்று இடைக்கால அரசின் தலைமை ஆலோசகா் முகமது யூனுஸின் முக்கிய உதவியாளா் மஹ்ஃபூஸ் ஆலம் தெரிவித்துள்ளார். மேலும் அவர், “வங்கதேச ஆதரவுக் கட்சிகளுக்கு இடையே மட்டும்தான் தோ்தல் நடைபெறும். இவற்றில் ஏதேனும் ஒரு கட்சி, நியாயமான தேர்தல் செயல்முறை மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டு எதிர்கால ஆட்சியை அமைக்கும்" என தெரிவித்துள்ளார்.

முகமது யூனுஸ்

வங்கதேசத்தில் பொதுத்தேர்தல் 2025ஆம் ஆண்டின் இறுதியிலோ அல்லது 2026ஆம் ஆண்டின் முதல் பாதியிலோ நடைபெறலாம் என கடந்த ஆண்டு இறுதியில் அந்நாட்டின் இடைக்காலத் தலைவர் முகமது யூனுஸ் தெரிவித்திருந்தார்.