shehbaz sharif ANI
உலகம்

பாகிஸ்தானில் ஆட்சி கலைப்பா? ஆபத்தில் பிரதமர் ஷெபாஷ் ஷெரிப்! நடந்தது என்ன?

பாகிஸ்தானில் ஆட்சி கலைப்பு நடப்பதற்கான வாய்ப்புகள் அதிகமாக உள்ளது.. ஷெபாஸ் ஷெரிப் தனது பிரதமர் பதவியை இழப்பதற்கும் வாய்ப்பு இருப்பதாக சொல்லப்படுகிறது.

PT WEB

2018ல் பிரதமரான இம்ரான் கான், 2022ல் நம்பிக்கையில்லா தீர்மானத்தால் பதவி இழந்து, ஊழல் வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டார். அவருக்கு சரியான சிகிச்சை இல்லை என குடும்பம் குற்றம்சாட்ட, உச்சநீதிமன்றம் தனியார் மருத்துவமனைக்கு மாற்ற உத்தரவிட்டது. இதை அரசு மறுத்ததால், நீதிமன்ற-அரசு மோதல் தீவிரமடைந்து, எதிர்கட்சிகள் போராட்டம் மூலம் ஷெபாஸ் ஷெரீப் ஆட்சி ஆபத்தில் உள்ளதாக கூறப்படுகிறது.

செய்தியாளர் - கார்த்திகேயன்

கடந்த 2018-ஆம் ஆண்டு அன்று, பாகிஸ்தானின் பிரதமராக பதவியேற்ற இம்ரான் கான், எதிர்கட்சிகளின் நம்பிக்கையில்லா தீர்மானத்தால் கடந்த 2022-ஆம் ஆண்டு அன்று பதவியை இழந்தார். இதையடுத்து, பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டு அதிரடியாக கைது செய்யப்பட்ட இம்ரான் கான், சிறையில் அடைக்கப்பட்டார்.

தற்போது, பாகிஸ்தானின் பிரதமராக ஷெபாஸ் ஷெரீப் பதவி வகித்து வருகிறார். இப்படியான சூழலில், ஷெபாஸ் ஷெரீப்பின் ஆட்சிக்கும் பெரும் ஆபத்து வர இருப்பதாக, தகவல் வெளியாகியுள்ளது. அதாவது, சிறையில் இருக்கும் இம்ரான் கானுக்கு, உடல்நலம் பாதிக்கப்பட்டதாகவும், அவருக்கு சிறையில் சிகிச்சை சரியாக வழங்குவதில்லை என்றும், அவரது குடும்பத்தினர் குற்றஞ்சாட்டியிருந்தனர்.

shehbaz sharif

இதையடுத்து, இந்த விவகாரத்தில் தலையிட்ட உச்சநீதிமன்றம், அவரை தனியார் மருத்துவமனைக்கு மாற்றி, சிகிச்சை வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டது. ஆனால், அதனை ஏற்க மறுத்த அரசு, இந்த உத்தரவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொண்டது. இந்த விவகாரத்தில் அரசுக்கும் உச்சநீதிமன்றத்துக்கும் இடையே ஏற்பட்டுள்ள மோதல், பாகிஸ்தானில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

மேலும், பாகிஸ்தானின் எதிர்கட்சியான பி.டி.ஐ, நீதிமன்ற உத்தரவை அரசு முழுமையாக அமல்படுத்தவில்லை என்றும், நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், பெரும் எதிர்ப்புகளை பதிவு செய்து வருகிறது.

imran khan

உச்சநீதிமன்றத்திற்கும், அரசுக்கும் இடையிலேயே இவ்வளவு பெரிய போராட்டம் நடந்து வருவதால், அங்கு ஆட்சி மாற்றம் நிகழ வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. எதிர்கட்சிகளின் போராட்டம் பாகிஸ்தானில் தீவிரம் அடைந்தாலோ, அரசு உச்சநீதிமன்ற மோதல் அதிகரித்தாலோ, கூட்டணி கட்சிகளின் ஆதரவு பாதிக்கப்பட்டாலோ, ஷெபாஸ் ஷெரிப்பின் ஆட்சி கவிழும் நிலைக்கு தள்ளப்படும்.

தற்போதைய நிலவரப்படி, உடனடியாக ஆட்சி கவிழும் என்ற கூற முடியாவிட்டாலும், இம்ரான் கான் விவகாரம் பாகிஸ்தானின் அரசியல் பதற்றத்தை மீண்டும் அதிகரித்து வருவது தெளிவாகத் தெரிகிறது.