உலகம்

பாலியல் புகார்: சீன முன்னாள் துணை அதிபர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்

kaleelrahman

சீன முன்னாள் துணை அதிபர் மீது டென்னிஸ் வீராங்கனை பாலியல் புகார் அளித்திருந்த நிலையில், அந்நாட்டில் டென்னிஸ் தொடர்களை சர்வதேச மகளிர் டென்னிஸ் சங்கம் தற்காலிகமாக ரத்து செய்துள்ளது.

சீனாவைச் சேர்ந்த முன்னணி டென்னிஸ் வீராங்கனை பெங் சுகாய், அந்நாட்டின் முன்னாள் துணை அதிபர் ஷாங்க் கயோலி தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக சமூக வலைதளத்தில் புகார் அளித்திருந்தார். புகாரின் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாத நிலையில், அவரது பதிவும் நீக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில், பெங் சுகாய்-க்கு ஆதரவு அளிக்கும் வகையில் சர்வதேச மகளிர் டென்னிஸ் சங்கம் களமிறங்கியுள்ளது. பாலியல் புகார் குறித்து நேர்மையான முறையில் விசாரணை நடத்தி, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளது.

டென்னிஸ் வீராங்கனைகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் கடமை தங்களுக்கு இருப்பதாகக் கூறியுள்ள சர்வதேச மகளிர் டென்னிஸ் சங்கம், சீனாவில் நடக்கவிருந்த சர்வதேச போட்டிகள் தற்காலிகமாக கைவிடப்படுவதாக அறிவித்துள்ளது.