சீனாவில் 27 மாகாணங்களில் ஏற்பட்டுள்ள கடும் வெள்ளப்பெருக்கால் பாதிக்கப்பட்டு 3 கோடிக்கும் மேற்பட்ட மக்கள் கடும் இன்னல்களைச் சந்தித்து வருகின்றனர்.
ஜூன் மாதம் முதல் சீனாவில் கனமழை பெய்து வருகிறது. இந்த கன மழையால் சீனாவில் உள்ள 433 ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இவற்றில் 107 ஆறுகளில் அபாய அளவை தாண்டி தண்ணீர் பாய்கிறது. மீதமுள்ள 33 ஆறுகளில் வரலாறு காணாத அளவிற்கு நீர் அளவு பதிவாகியுள்ளது.
10 முக்கிய நீர் வளங்களில் 15 நாட்களுக்கும் மேலாக அபாய அளவை தாண்டி நீர் வெளியேறி வருவதாக அந்நாட்டு நீர் மேலாண்மை அமைச்சகம் தெரிவித்துள்ளது. ஆறுகளில் நிரம்பிய தண்ணீர் குடியிருப்புப் பகுதிகளுக்குள் வெள்ளமாக பெருக்கெடுத்துள்ளது. அதன் விளைவு 3 கோடிக்கும் மேற்பட்ட மக்கள் இயல்பு வாழ்க்கையை இழந்து தவிக்கின்றனர். 20 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். வெள்ளத்தில் மூழ்கி 140க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாகவும், ஏராளமானோர் நிலை குறித்து தகவல் தெரியவில்லை எனவும் அந்நாட்டு அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.