தாய்லாந்தில் ஆசிய வெளியுறவுத்துறை அமைச்சர்கள் மாநாட்டு நடைபெற்று வரும் நிலையில், அங்கு மூன்று இடங்களில் அடுத்தடுத்து நடந்த குண்டுவெடிப்பில் 2 பேர் காயமடைந்துள்ளனர்.
பாங்காக்கில் இன்று காலை 3 இடங்களில் அடுத்தடுத்து சிறிய ரக நாட்டு வெடிகுண்டுகள் வெடித்தன. இதில் துப்புரவு தொழிலாளிகள் 2 பேர் படுகாயமடைந்துள்ளனர். சோங் பகுதியில் உள்ள மாடி ரயில் ஸ்டேஷன் அருகே ஒரு குண்டும், அதனருகில் மஹானகோன் கட்டிடத்தில் ஒரு குண்டும், மாடி ரயில்வே ஸ்டேஷனின் 2 வது கேட் அருகில் மற்றொரு குண்டும் வெடித்தன. இவை அனைத்தும் நாட்டு வெடிகுண்டுகள் என்று தெரிவித்துள்ள போலீசார், மக்கள் யாரும் பீதியடைய வேண்டாம் என்று கூறியுள்ளனர்.
பாங்காக்கில் தென்கிழக்காசிய நாடுகளின் கூட்டமைப்பு மாநாடு (ஆசியன்) நடைபெற்று வருகிறது. இந்த மாநாட்டில் இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர், அமெரிக்காவின் பாம்பியோ உள்பட ஆசிய நாட்டு தலைவர்கள் பங்கேற்றுள் ளனர். இந்நிலையில் நடந்துள்ள இந்த குண்டு வெடிப்பு சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அங்கு பாதுகாப்பு பலப்படுத்தப் பட்டுள்ளது.