இலங்கையின் கடல் எல்லையை நோக்கி இரண்டாவது ஈரானிய போர்க்கப்பல் சென்று கொண்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இது முன்பு மூழ்கடிக்கப்பட்ட கப்பலைப் போலவே குறிவைக்கப்படலாம் என்ற அச்சம் உள்ளது. இலங்கை அரசு தனது நிலைப்பாட்டை உடனடியாக வெளிப்படுத்த வேண்டும் என்று நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ வலியுறுத்தியுள்ளார்.
அமெரிக்க நீர்மூழ்கிக் கப்பல் ஈரானிய போர்க்கப்பலான ஐஆர்ஐஎஸ் தேனாவை அழித்து, குறைந்தது 87 மாலுமிகளைக் கொன்ற மறுநாளே, இரண்டாவது ஈரானிய போர்க்கப்பல் இலங்கையின் கடல் எல்லையை நோக்கிச் சென்று கொண்டிருப்பதாக இலங்கை அமைச்சர் நளிந்தா ஜெயதிஸ்ஸா தெரிவித்துள்ளார். இந்தக் கப்பலில் 100க்கும் மேற்பட்ட பணியாளர்கள் இருப்பதாகக் கூறப்படுகிறது. இலங்கையின் தெற்கு கடற்கரையில் நேற்று மூழ்கடிக்கப்பட்ட அதன் சகோதரி கப்பலைப் போலவே இந்தக் கப்பலும் குறிவைக்கப்படலாம் என்ற அச்சம் இருப்பதாக வட்டாரங்கள் AFP செய்தி நிறுவனத்திடம் தெரிவித்துள்ளன. ”உயிர்களைப் பாதுகாக்க நாங்கள் எங்களால் முடிந்த அனைத்தையும் செய்கிறோம்" என்று அமைச்சர் ஜெயதிஸ்ஸா உறுதியளித்துள்ளார்.
போர்க்கப்பல் அவசர துறைமுக அழைப்பைக் கோரியுள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த போர்க்கப்பல் அரசாங்க அனுமதிக்காகக் காத்திருப்பதாக இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ கூறியிருக்கிறார் . "இந்த விஷயத்தில் அரசாங்கம் தனது நிலைப்பாடு என்ன என்பதை உடனடியாக வெளிப்படுத்த வேண்டும்" என்று அவர் Xஇல் பதிவிட்டுள்ளார்.
அவர் தனது X தளத்தில், இலங்கையின் பிரத்யேக பொருளாதார மண்டலத்தில், நமது பிராந்திய நீர் எல்லைக்கு வெளியே, மற்றொரு ஈரானிய கப்பல் இருப்பதாகவும், அவசர துறைமுக அழைப்பை மேற்கொள்ள அரசாங்கத்தின் அனுமதியை நாடியுள்ளதாகவும் எங்கள் கவனத்திற்குக் கொண்டுவரப்பட்டுள்ளது. இருப்பினும், அது இன்னும் அரசாங்கத்தின் அனுமதிக்காகக் காத்திருக்கிறது” எனப் பதிவிட்டுள்ளார்.
மேலும் அவர், “இந்த விஷயத்தில் அரசாங்கம் தனது நிலைப்பாடு என்ன என்பதை உடனடியாக வெளிப்படுத்த வேண்டும். மேலும் ஒரு முடிவை எடுக்க முடியாவிட்டால், சிறிமாவோ பண்டாரநாயக்க எடுத்த நடுநிலைக் கொள்கையை நினைத்துப் பார்க்க வேண்டும். 1971ஆம் ஆண்டு பங்களாதேஷ் விடுதலைப் போரின்போது, மோதலுக்குப் பதிலளிக்கும் விதமாக பாகிஸ்தான் விமானங்களுக்கு இந்தியா தனது வான்வெளியை மூடிய பின்னர், பங்களாதேஷில் பாகிஸ்தான் விமானத்திற்கு எரிபொருள் நிரப்ப அனுமதி அளித்திருந்தார். அப்போதைய பிரதமர் சிறிமாவோவின் முடிவு தேவை மற்றும் நட்பு ஆகிய காரணங்களாலும் மனிதாபிமான அடிப்படையிலும் எடுக்கப்பட்டது” என்று பதிவிட்டுள்ளார்.
இதற்கிடையே நேற்று டார்பிடோ தாக்குதலில் கொல்லப்பட்ட 87 ஈரானிய மாலுமிகளின் உடல்களை இலங்கையின் கல்லே (GALLE) துறைமுக நகர அதிகாரிகள் அமெரிக்க ராணுவத்திடம் ஒப்படைக்கத் தயாராகி வரும் நிலையில் இந்த 2வது கப்பல் வந்துள்ளது. கல்லேயில் உள்ள பிரதான மருத்துவமனையில், மீட்கப்பட்ட 32 ஈரானியர்கள் பலத்த பாதுகாப்பின் மத்தியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
தீவின் கடல் பகுதிக்குள் பாதுகாப்பாக நுழைய ஈரான் கோரியதாகவும், இலங்கை அதிபர் அனுர குமார திசாநாயக்க உயர் அதிகாரிகளைச் சந்தித்து பதில் குறித்து விவாதித்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்கிடையில், காணாமல் போன 60 பேரைத் தேடும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாக கடற்படை செய்தித் தொடர்பாளர் புத்திக சம்பத் தெரிவித்துள்ளார்.
நேற்று, விடியற்காலையில் கப்பல் ஒரு பேரிடர் அழைப்பை விடுத்தது, ஆனால் இலங்கை மீட்புக் கப்பல் அந்தப் பகுதியை அடைந்த நேரத்தில் அது முற்றிலும் மூழ்கியது. விசாகப்பட்டினத்தில் ஒரு ராணுவப் பயிற்சியிலிருந்து திரும்பி வந்தபோது போர்க்கப்பல் தாக்கப்பட்டது.
ஈரானின் கடற்கரையிலிருந்து 2,000 மைல்கள் தொலைவில் கடலில் அமெரிக்கா ஓர் அட்டூழியத்தைச் செய்துள்ளது. தாக்குதலுக்கு அமெரிக்கா "கடுமையாக வருத்தப்படும்" என்று ஈரானிய வெளியுறவு அமைச்சர் எச்சரிக்கை விடுத்திருந்தார்.
இதனைத் தொடர்ந்து சில மணி நேரங்களுக்குப் பிறகு, இஸ்லாமிய புரட்சிகர காவல்படை (IRGC) இன்று வடக்கு பாரசீக வளைகுடாவில் ஒரு அமெரிக்க டேங்கரைத் தாக்கியதாக ராய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டது. அமெரிக்க கப்பல் தீப்பிடித்து எரிந்ததாக ஈரானிய அரசு ஊடகங்கள் தெரிவித்தன.