உலகம்

தீவிரவாத செயல்களில் ஈடுபட்ட 13 வயது சிறுவன் - பிரிட்டனில் அதிர்ச்சி

ஜா. ஜாக்சன் சிங்

பிரிட்டனில் தீவிரவாத செயல்களில் ஈடுபட்டதாக 13 வயது சிறுவனை ஸ்காட்லேண்டு போலீஸார் கைது செய்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

பிரிட்டன் தலைநகர் லண்டனில் தீவிரவாத இயக்கம் ஒன்றின் ஆதரவாளர்கள் செயல்பட்டு வருவதாக ஸ்காட்லேண்ட் யார்டு போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதன்பேரில் லண்டனில் தீவிர கண்காணிப்பில் போலீஸார் ஈடுபட்டு வந்தனர். அப்போது ஒரு தீவிரவாத அமைப்பின் சித்தாந்தங்கள், அதன் கொள்கைகள் போன்றவற்றை இணையதளத்தில் மர்மநபர் ஒருவர் தொடர்ந்து பகிர்ந்து வருவதை போலீஸார் கண்டறிந்தனர். மேலும், அந்த இயக்கத்துக்கு ஆள் சேர்க்கும் நடவடிக்கையிலும் அவர் ஈடுபட்டு வருவதும் தெரியவந்தது.

எனினும், அவரது இருப்பிடத்தை போலீஸாரால் கண்டுபிடிக்க முடியவில்லை. இதையடுத்து, தீவிரவாத தடுப்புக் குழுவின் உதவியுடன் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டதில், அந்த மர்மநபர் 13 வயது சிறுவன் என்பதும், மேற்கு லண்டலின் உள்ள ஒரு பள்ளியில் அவர் பயின்று வருவதும் தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து, நேற்று அந்த சிறுவனை போலீஸார் கைது செய்தனர். அவருக்கு எப்படி தீவிரவாதிகளுடன் தொடர்பு ஏற்பட்டது; லண்டனில் வேறு யார் யார் தீவிரவாத இயக்கங்களுக்கு ஆதரவாக செயல்பட்டு வருகிறார்கள் என்பது குறித்து போலீஸார் அவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.