Model image grok
உலகம்

கச்சா எண்ணெய் பைப் லைன்.. திடீரென மூடிய சவுதி அரேபியா.. விலையேற்றத்தைச் சந்திக்கும் உலகம்!

இந்த பைப்லைன் முடக்கப்பட்டதைத் தொடர்ந்து உலகச் சந்தையில் பிரெண்ட் (Brent) கச்சா எண்ணெய் விலை பீப்பாய் ஒன்றுக்கு 100 டாலரைத் தாண்டி உயர்ந்துள்ளது

Prakash J

நாளுக்கு நாள் பதற்றம் அதிகரித்து வரும் நிலையில், சவுதி அரேபியா தனது மிக முக்கியமான கச்சா எண்ணெய் பைப்லைனை மூடியதைத் தொடர்ந்து, உலகச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்துள்ளது. பைப் லைனில் சேதம் ஏற்பட்டுள்ளதால், அதைச் சீரமைக்கும் வரை, சவுதி அரேபியா மாற்று வழியைப் பயன்படுத்தவும் திட்டமிட்டுள்ளது.

மத்திய கிழக்கில் நடைபெற்று வரும் போரில், ஈரானுக்கு ஹவுதி அமைப்பினர் ஆதரவளித்து வருகின்றனர். அவர்கள், செங்கடலில் செல்லும் சரக்கு மற்றும் எண்ணெய்க் கப்பல்களைக் குறிவைத்து தாக்குதல் நடத்தி வருகின்றனர். இதற்கிடையே, ஈராக் பகுதியிலிருந்து ஏவப்பட்ட பல ட்ரோன்கள், சவுதி அரேபியாவின் ரியாத் மற்றும் மதினா பிராந்தியங்களில் அமைந்துள்ள பைப்லைனின் இறைப்பி நிலையங்களை (Pumping Stations) தாக்கியுள்ளன. இதையடுத்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அந்த பைப் லைனை சவுதி அரேபியா தற்காலிகமாக மூடியுள்ளது.

சுமார் 1,200 கிலோமீட்டர் நீளம் கொண்ட இந்த பைப்லைன், சவுதியின் கிழக்குப் பகுதியில் உள்ள எண்ணெய் வயல்களிலிருந்து செங்கடல் கரையோரத்தில் உள்ள யான்பு (Yanbu) துறைமுகத்திற்கு நாளொன்றுக்கு 40 முதல் 50 லட்சம் பேரல் கச்சா எண்ணெய்யைக் கொண்டு செல்லும் திறன் கொண்டது.

வளைகுடாப் பகுதியில் நிலவும் போர்ப் பதற்றங்களால் ஹார்முஸ் நீரிணை (Strait of Hormuz) வழியிலான கப்பல் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ள நிலையில், சவுதி அரேபியா தனது கச்சா எண்ணெய்யை சர்வதேச சந்தைக்கு ஏற்றுமதி செய்ய இந்த பைப்லைனையே முதன்மையாக நம்பியிருந்தது.

தற்போது அது பாதிக்கப்பட்டிருக்கும் நிலையில், சவுதி அரேபியா ஆசிய மற்றும் மேற்கத்திய நாடுகளுக்கு எண்ணெய் அனுப்ப நீண்ட கடல் வழிகளையோ அல்லது எகிப்து வழியிலான மாற்றுப் பாதைகளையோ பயன்படுத்த வேண்டிய சூழலுக்கு சவுதி அரேபியா தள்ளப்பட்டுள்ளது. இது ஒருபுறமிருக்க, மறுபுறம் இந்த பைப்லைன் முடக்கப்பட்டதைத் தொடர்ந்து உலகச் சந்தையில் பிரெண்ட் (Brent) கச்சா எண்ணெய் விலை பீப்பாய் ஒன்றுக்கு 100 டாலரைத் தாண்டி உயர்ந்துள்ளது