சவுதி அரேபியாவுக்கு 48 அதிநவீன F-35 Lightning II போர் விமானங்கள் மற்றும் 49 Pratt & Whitney F135 இன்ஜின்களை விற்பனை செய்யும் 24.3 பில்லியன் டாலர் மதிப்பிலான ஒப்பந்தத்திற்கு அமெரிக்க வெளியுறவுத்துறை ஒப்புதல் அளித்துள்ளது. காங்கிரஸ் அனுமதி கிடைத்தால், சவுதி மத்திய கிழக்கில் F-35 பெற்ற சில நாடுகளில் ஒன்றாகும்.
செய்தியாளர் - M. மீரா
வளைகுடா பிராந்தியத்தில் பாதுகாப்பு சூழல் தீவிரமடைந்து வரும் நிலையில், சவுதி அரேபியாவுக்கு 48 அதிநவீன F-35 Lightning II போர் விமானங்களை விற்பனை செய்வதற்கான சுமார் 24.3 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிலான சாத்தியமான ஒப்பந்தத்திற்கு அமெரிக்க வெளியுறவுத்துறை ஒப்புதல் அளித்துள்ளது.
இந்த ஒப்பந்தம் தற்போது இறுதி விற்பனை ஒப்பந்தமாக மாறவில்லை. அமெரிக்க காங்கிரஸின் பரிசீலனை முடிந்த பின்னரே அடுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.
இந்த $24.3 பில்லியன் ஒப்பந்தத்தில் 48, F-35 விமானங்களுடன் 49 Pratt & Whitney F135 இன்ஜின்கள் இடம்பெறுகின்றன. இதில் 48 இன்ஜின்கள் விமானங்களில் பயன்படுத்தப்படுவதுடன், ஒன்று உதிரியாக வழங்கப்பட உள்ளது.
F-35 என்பது குறைந்த கண்ணுக்குத் தென்படும் (stealth) திறன் கொண்ட ஐந்தாம் தலைமுறை போர் விமானமாகும். இந்த ஒப்பந்தம் நடைமுறைக்கு வந்தால், சவுதி அரேபியா F-35 விமானங்களைப் பெறும் மத்திய கிழக்கு நாடுகளில் ஒன்றாக மாறும்.
மேலும் பாதுகாப்பான தகவல் தொடர்பு அமைப்புகள், வழிகாட்டுதல் மற்றும் இலக்கு நிர்ணய கருவிகள், மின்னணு போர் தொடர்பான ஆதரவு, பயிற்சி உபகரணங்கள், உதிரி பாகங்கள் மற்றும் பராமரிப்பு ஆதரவு உள்ளிட்டவை தொகுப்பில் இடம்பெறுகின்றன.
Lockheed Martin நிறுவனத்தின் F-35 மற்றும் Pratt & Whitney நிறுவனத்தின் F135 இன்ஜின்கள் இந்தத் திட்டத்தின் முக்கிய பகுதிகளாக உள்ளன.
சவுதி அரேபியாவின் பாதுகாப்புத் திறனை அதிகரிப்பது மற்றும் அமெரிக்கப் படைகளுடன் அதன் கூட்டு செயல்பாட்டை மேம்படுத்துவது இந்த விற்பனையின் நோக்கங்களில் ஒன்றாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. வளைகுடா பிராந்தியத்தின் பாதுகாப்பு மற்றும் அரசியல் ஸ்திரத்தன்மைக்கும் இது உதவும் என அமெரிக்கா கூறியுள்ளது.