சவுதி அரேபியாவின் உள்நாட்டு விவகாரத்தில் கனடா தலையிட்டதால் கனடா உடனான உறவை சவுதி அதிரடியாக முறித்துக் கொண்டுள்ளது.
கனடா உடனான புதிய வர்த்தக மற்றும் முதலீட்டு உறவுகளை சவுதி அரேபியா முறித்துக் கொள்வதாக அறிவித்துள்ளது. மேலும் கனடாவில் உள்ள தனது நாட்டின் தூதரையும் திரும்ப அழைத்துக் கொண்டுள்ளது. உள்நாட்டு விவகாரத்தில் கனடா தலையிட்டதால், இந்த முடிவை எடுத்திருப்பதாக சவுதி அரேபியாவின் வெளியுறவுத்துறை அமைச்சகம் ட்விட்டரில் பதிவிட்டுள்ளது. அதில் சவுதியில் உள்ள கனடா தூதரை வெளியேறும்படி உத்தரவிட்டிருப்பதாகவும், அதே போல் கனடாவில் உள்ள தமது நாட்டின் தூதரை திரும்ப அழைத்துக் கொண்டிருப்பதாகவும் அந்த ட்விட்டர் பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆண்களுக்கு நிகராக பெண்களையும் சமமாக நடத்தக் கோரி, போராட்டம் நடத்திய சமூக ஆர்வலர்களை சவுதி அரேபிய அரசு கைது செய்தது. இதற்கு கனடா எதிர்ப்பு தெரிவித்து கருத்து வெளியிட்டதால், அந்நாட்டுனான உறவை முறித்துக் கொள்ள சவுதி முடிவு செய்துள்ளது.