உலகம்

சீற்றத்துக்குப்பின் சுருங்கிப்போன எரிமலை

சீற்றத்துக்குப்பின் சுருங்கிப்போன எரிமலை

webteam

இந்தோனேசியாவில் உள்ள அனக் கிரகடாவ் எரிமலை வெடித்து சிதறும்போது ஏற்பட்ட நிகழ்வுகளை படம்பிடித்த செயற்கைக்கோள் புகைப்படங்கள் வெளியாகியுள்ளன. 

கடந்த ஒரு வருடமாகவே இந்தோனேசியாவில் எரிமலை அடிக்கடி வெடித்த வண்ணம் உள்ளது. சுமத்ரா மற்றும் ஜாவா தீவுகளுக்கு இடையே உள்ள சுந்தா நீரிணையில் இருக்கும் அனக் கிரகடாவ் தீவில் இருக்கும் எரிமலை கடந்த வாரம் திடீரென வெடித்ததால் சுனாமி தாக்கியது. இந்த தாக்குதலில் சுமார் 400க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். சைல்ட் எரிமலை என்று அழைக்கப்படும் இந்த அனக் கிரகடாவ் எரிமலை சீறியதில் அப்பகுதி முழுவதும் கரும்புகை சூழ்ந்தது. எரிமலை வெடிப்பை தொடர்ந்து சுமார் 3 ஆயிரம் மீட்டர் உயரத்திற்கு லாவா வெளிவந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் பொங்கிவரும் எரிமலையின் செயல்பாடுகள் மற்றும் நெருப்பு குழம்பின் நகர்வுகளை கடலோர காவல்படையினர் கண்காணித்து வருகின்றனர்.

இந்தோனேசியாவில் மிகவும் உயரமான மற்றும் உயிர்ப்புடன் இருக்கக் கூடிய இந்த எரிமலையை படம்பிடிக்க முயன்றபோது மேகமூட்டம் குறுக்கிட்டதால், தெளிவான படங்கள் கிடைக்கவில்லை. ஆனால் எரிமலை வெடித்த பின் செயற்கைகோள் மூலம் மேக மூட்டங்களை ஊடுருவி புகைப்படம் எடுக்கப்பட்டது. இதன‌ மூலம் எரிமலையின் அளவு சுருங்கி இருப்பது தெளிவாக தெரிகிறது. சீற்றத்துக்கு முன் ஆகஸ்ட் 20-ம் தேதி எடுக்கப்பட்ட புகைப்படத்தில் உள்ள எரிமலையின் அளவைவிட, சீற்றத்துக்குப் பின் கடந்த 22-ம் தேதி எடுக்கப்பட்ட புகைப்படத்தில் அனக் கிரகடாவ்யின் தென்மேற்குப் பகுதி அளவில் சுருங்கியிருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.