உலகம்

பூமியில் பால் கடல்: எங்கு தென்பட்டது தெரியுமா? - சாட்டிலைட் படத்தின் பின்னணி இதோ!

JananiGovindhan

கடல் அலைகள் நீல நிறத்தில் ஒளிரும் நிகழ்வுகள் கடந்தகால நாட்களின் சென்னை உட்பட பல்வேறு கடற்கரைகளில் நிகழ்ந்ததை அறிந்திருப்போம். இப்படியாக ஒளிரும் கடல் அலை உயிரொளிர்தல் என்ற நிகழ்வால் ஏற்படுவதாக கடலுயிர் விஞ்ஞானிகள் தெரிவித்திருக்கிறார்கள். அதாவது, மிதவை உயிரிகள் எனக் கூறக்கூடிய பாசி வகைகளில் நிகழும் வேதியியல் மாற்றத்தால் கடல் அலை பள பளவென ஒளிர்கிறது என கூறுகிறார்கள்.

அது நீலம் அல்லது பச்சை நிறத்தில்தான் வழக்கமாக ஒளிர்ந்ததை கேள்விப்பட்டிருப்போம். ஆனால், இந்தோனேசியாவில் உள்ள ஜாவா கடலில் பால் போன்று வெள்ளை நிறத்தில் ஒளிர்ந்த நிகழ்வு கடந்த 2019ம் ஆண்டு நடந்திருக்கிறது.

இது தொடர்பான செயற்கைக்கோள் படங்கள் தற்போது ஆவணப்படுத்தப்பட்டிருப்பதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அதனை கொலராடோ ஸ்டேட் பல்கலைக்கழகத்தின் வளிமண்டல விஞ்ஞானி ஸ்டீவன் மில்லர் நேஷனல் அகாடமி ஆஃப் சயின்ஸின் செயல்முறைகளில் வெளியிடப்பட்ட தனது ஆய்வறிக்கையில் குறிப்பிட்டிருக்கிறார்.

அதில், 2019ம் ஆண்டு இந்தோனேசியாவின் தெற்கே உள்ள ஜாவா கடலில் எடுக்கப்பட்ட Milky Sea எனக் கூறக்கூடிய பால் கடல் வெளியின் செயற்கைக்கோள் படங்களை, சில தரம் குறைந்த படங்களை கொண்டு ஒப்பிட்டு உறுதி செய்தாகவும் மில்லர் கூறியிருக்கிறார்.

இதற்காக ஜாவா கடற்பகுதியில் அப்போது உலா வந்த கணேஷ் க்ரூ என்ற ஒரு தனியார் படகு குழுவினர் எடுத்த படங்களோடுதான் மில்லர் ஒப்பிட்டிருக்கிறாராம். அந்த படங்கள் 39,000 சதுர மைல்களுக்கு மேல் பரவியுள்ள பால் கடல்களைக் காட்டியது என்றும் கூறியுள்ளார்.

முன்னதாக, தேசிய அறிவியல் அகாடமியின் செயல்முறைகளிடம் (PNAS) பேசியிருந்த கணேஷ் க்ரூ, “கடற்பரப்பின் நிறம் இருட்டில் ஒளிரும் நட்சத்திரங்கள் அல்லது ஸ்டிக்கர் போன்று இருந்ததாகவும், எங்கள் படகின் கேப்டன் அந்த பால் கடல் 30 அடிக்கு கீழே இருந்து பளபளப்பாக தோன்றியதை கவனித்ததாகவும் குறிப்பிட்டிருக்கிறார்கள்.

இதுபோன்ற பால் கடல்கள் அரியவகை பயோ லுமினசென்ட் பாக்டீரியாக்களால் ஏற்படுகின்றன எனவும், நீலம் அல்லது பச்சை நிறத்திற்கு பதிலாக வெள்ளை நிறத்தில் ஒளிர்வதாகவும் கூறியுள்ள ஆய்வாளர்கள், பெரியளவில் வெளிப்படும் ஒருவகை நுண்ணுயிரிகளுக்கு இடையேயான saprophytic உறவு காரணமாக இருக்கலாம் எனவும் தெரிவித்திருக்கிறார்கள்.

இதுபோக, தனியார் படகு குழுவினர் அந்த பால் கடல் நீரை சேகரித்த மாதிரியை ஆராய்ச்சிக்கு உட்படுத்தப்பட்டிருக்கிறது. அதில், அந்த பளபளப்பு நீங்கியதாக PNASல் வெளியான நிகழ்வுகளின் ஆவணங்கள் மூலம் தெரிய வந்திருக்கிறது.