அலெக்ஸி நவால்னி
அலெக்ஸி நவால்னி ட்விட்டர்
உலகம்

மரணமடைந்த அலெக்ஸி நவால்னி.. மாஸ்கோவில் உடல் அடக்கம்.. ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு!

Prakash J

ரஷ்ய எதிர்க்கட்சித் தலைவரான அலெக்ஸி நவால்னி, அரசுக்கு எதிரான போராட்டங்களை ஒருங்கிணைத்து வந்ததுடன், அதிபர் புதினை கடுமையாக விமர்சித்தும் வந்தார். இந்த நிலையில், பல்வேறு வழக்குகளில் அவருக்கு 19 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டிருந்தது. இதனால் கடந்த 2021-ஆம் ஆண்டுமுதல் அவர் சிறைத் தண்டனை அனுபவித்து வந்தார்.

இதற்கிடையே, கடந்த பிப்ரவரி 17-ஆம் தேதி அவர் திடீரென சிறையிலேயே மரணமடைந்தார். அவரது உயிரிழப்புக்கான காரணம் தற்போதுவரை தெரிவிக்கப்படவில்லை. நவால்னி மர்மமான முறையில் சிறையில் மரணம் அடைந்த சம்பவம் உலக அளவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. நவால்னி மரணம் குறித்து பலரும் சந்தேக கருத்துகளைத் தெரிவித்தனர்.

இதனிடையே அலெக்ஸி நவால்னியின் உடலை ரஷ்ய அரசு தங்களிடம் ஒப்படைக்க மறுப்பதாக நவால்னியின் மனைவி மற்றும் தாயார் குற்றம்சாட்டியிருந்தனர். இந்த நிலையில், அலெக்ஸி நவால்னியின் இறுதிச்சடங்கு மார்ச் 1ஆம் தேதி நடைபெறும் என அறிவிப்பு வெளியாகி இருந்தது.

அதன்படி, நீண்ட இழுபறிக்குப் பிறகு நவால்னியின் உடல் அவரது குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து, மாஸ்கோவின் தென்கிழக்கு மரியினோ மாவட்டத்தில் உள்ள தேவாலயத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்புக்கு மத்தியில் நவால்னியின் இறுதிச் சடங்கு நேற்று (மார்ச் 1) நடைபெற்றது. அதன்பின்னர் தேவாலயத்துக்கு அருகில் உள்ள மயானத்தில் நவால்னியின் உடல் அடக்கம் செய்யப்பட்டது.

ஆயிரக்கணக்கானோர் அவரது இறுதிச் சடங்கில் பங்கேற்றனர். அலெக்ஸி நவால்னி அடக்கம் செய்யப்பட்ட கல்லறைக்கு வெளியே, சில ஆதரவாளர்கள் அவரது பெயரை தொடர்ந்து உச்சரித்துக்கொண்டே இருந்தனர்.