putin pt web
உலகம்

புதினுக்கு ஆபத்தா? இஸ்ரேலுக்கு பயந்து சிசிடிவிகளை முடக்கிய ரஷ்யா?

ஈரான் உச்சத் தலைவரின் படுகொலைக்கு பின், மொசாட்– சிஐஏ-வின் ஹேக் அச்சம் காரணமாக ரஷ்ய அதிபர் புதினின் பாதுகாப்பு சிசிடிவி வலையமைப்பை ரஷ்யா பகுதியளவில் முடக்கியிருப்பதாக தகவl வெளியாகியுள்ளது.

PT WEB

செய்தியாளர் - M. மீரா

ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் மற்றும் அவரது நெருங்கிய உதவியாளர்களைப் பாதுகாக்கும் சிறப்பு கண்காணிப்பு அமைப்பின் சில பகுதிகளை ரஷ்யப் பாதுகாப்புப் படைகள் முடக்கியுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

2026 பிப்ரவரி 28 அன்று, ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி, அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் கூட்டுத் தாக்குதலில் படுகொலை செய்யப்பட்டார்.

ஈரானில் பொதுமக்களின் நடமாட்டத்தைக் கண்காணிக்கவும், போராட்டங்களை ஒடுக்கவும் அந்நாட்டு அரசு உருவாக்கிய பிரம்மாண்ட சிசிடிவி கேமரா நெட்வொர்க்கை இஸ்ரேலின் உளவு அமைப்பான மொசாட் (Mossad) மற்றும் அமெரிக்காவின் சிஐஏ (CIA) ஆகியவை பல ஆண்டுகளாக ரகசியமாக ஹேக் செய்து வந்துள்ளன.

Iran Supreme leader Ayatollah Ali Khamenei

தலைநகர் தெஹ்ரானில் உள்ள பெரும்பாலான கேமராக்களின் கட்டுப்பாட்டைத் தங்கள் வசம் எடுத்த உளவுத்துறையினர், அதன் வீடியோ பதிவுகளை என்க்ரிப்ட் செய்து டெல் அவிவ் நகரில் உள்ள தங்களின் சர்வர்களுக்குப் பரிமாற்றம் செய்துள்ளனர். இதன் மூலம் அலி கமேனியின் பாதுகாவலர்கள், வாகனங்களின் வழித்தடங்கள் மற்றும் அவரது தினசரி வாழ்க்கை முறையை (Pattern of life) துல்லியமாகக் கணித்து, அவர் இருந்த இடத்தின் மீது 30-க்கும் மேற்பட்ட குண்டுகளை வீசி கமேனியை கொலை செய்துள்ளனர்.

இதனையடுத்து, ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் மற்றும் அவரது நெருங்கிய உதவியாளர்களை பாதுகாக்க பயன்படுத்தப்படும் ஒரு சிறப்பு கண்காணிப்பு அமைப்பின் சில பகுதிகளை ரஷ்ய பாதுகாப்பு சேவைகள் முடக்கியுள்ளதாகக் கூறப்படுகிறது.

Putin & Netanyahu

புதினைப் பாதுகாக்கும் அமைப்பு, மாஸ்கோவில் குடிமக்களைக் கண்காணிக்கப் பயன்படுத்தப்படும் சுமார் 3,00,000 கண்காணிப்புக் கேமராக்களிலிருந்து வேறுபட்டது. இப்போது உளவுத்துறை அமைப்புகள், செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தி, ஆயிரக்கணக்கான கேமராக்களிலிருந்து பெறப்பட்ட மில்லியன் கணக்கான மணிநேர வீடியோ காட்சிகளை ஆய்வு செய்து, நபர்களை அடையாளம் காண்கிறது. அதாவது, முன்பை விட அதிக வேகத்துடனும் துல்லியத்துடனும் கண்டறிகிறது என்று ஃபைனான்சியல் டைம்ஸ் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.

புதினின் தனிப்பட்ட பாதுகாப்பு குறித்து ரஷ்ய அதிகாரிகள் ஏற்கனவே கவலை கொண்டிருந்ததாகவும், குறிப்பாக உக்ரேனிய உளவுத்துறை சேவைகள் ரஷ்யாவில் உள்ள போக்குவரத்து கேமரா அமைப்புகளை ஊடுருவியிருப்பதால் புதினின் சிறப்பு கண்காணிப்பு அமைப்பின் சில பகுதிகளை ரஷ்ய பாதுகாப்பு சேவைகள் முடக்கியுள்ளதாக அச்செய்தி தெரிவிக்கிறது.

கடந்த காலத்திலும் சிசிடிவி கேமராக்கள் எளிதில் ஊடுருவக்கூடியவை என்று நம்பப்பட்டது. ஆனால், செயற்கை நுண்ணறிவில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள், முகத்தை அடையாளம் காணுதல், துப்பாக்கியைக் கண்டறிதல் அல்லது வாகனப் பதிவு எண் அல்லது தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் வாகனத்தைக் கண்காணித்தல் போன்றவற்றையும் தாண்டிச் செல்லக்கூடியவை என்று கூறப்படுகிறது. எனவே ஈரானில் நடந்தது போன்ற ஒரு தொழில்நுட்ப நிழல் யுத்தத்தை ரஷ்யாவும் எதிர்கொள்ள நேரிடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.