நேட்டோ அமைப்பு நாடுகளில் உக்ரைன் இணையக்கூடாது என்பதற்காக, அதன் அண்டை நாடான ரஷ்யா, கடந்த 2022ஆம் ஆண்டு பிப்ரவரி 24ஆம் தேதி முதல் அந்நாட்டின் மீது போர் தொடுத்து வருகிறது. இவ்விரு நாடுகளுக்கும் இடையே ஏற்பட்டிருக்கும் போர், மூன்று ஆண்டுகளைக் கடந்தும் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதற்கிடையே, அமெரிக்க அதிபராக பதவியேற்றுள்ள ட்ரம்ப், இவ்விரு நாடுகளிடையே நடைபெற்று வரும் போரை நிறுத்துவதில் கவனம் செலுத்தி வருகிறார். இதற்கான பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. அதற்காக ரஷ்ய அரசு சில நிபந்தனைகளை விதித்திருப்பதாகவும் கூறப்படுகிறது. ஆனால், உக்ரைன் அரசு அதை ஏற்றுக்கொள்ளும் நிலையில் இல்லை. இதனாலேயே பேச்சுவார்த்தையில் இழுபறி நீடித்து வருகிறது. இதற்கிடையே, போரைத் தீவிரப்படுத்துவதில் ரஷ்யா தொடர்ந்து ஆர்வம் காட்டி வருகிறது. இந்தச் சூழலில் பேச்சுவார்த்தை தொடர்ந்துகொண்டே இருந்தால் அமெரிக்கா விலகிக் கொள்ளும் என அந்நாட்டு அதிபர் டொனால்டு ட்ரம்ப் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில், இரண்டாம் உலகப் போரில் சோவியத் யூனியன் மற்றும் அதன் நட்பு நாடுகளின் வெற்றியின் 80வது ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில், அடுத்த மாதம் உக்ரைனுடனான போரில் மூன்று நாள் போர் நிறுத்தத்தை ரஷ்ய அதிபர் புதின் இன்று அறிவித்துள்ளார். இந்தப் போர்நிறுத்தம் மே 8ஆம் தேதி தொடக்கத்தில் இருந்து மே 10ஆம் தேதி இறுதி வரை, அதாவது 72 மணி நேரம் நீடிக்கும் என ரஷ்ய அதிபர் மாளிகை தெரிவித்துள்ளது. மேலும் இந்த போர் நிறுத்தத்தை ஏற்கும்படி உக்ரைனுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. எனினும், உக்ரைன் தரப்பில் அத்துமீறல்கள் ஏற்பட்டால், ரஷ்ய ஆயுதப் படைகள் பதிலடி கொடுக்கும் எனவும் அது எச்சரித்துள்ளது. 3 ஆண்டுகளுக்கு மேலாக நடைபெற்று வரும் உக்ரைன் போரில் முதல்முறையாக கடந்த ஏப்ரல் 20ஆம் தேதி ரஷ்யா தற்காலிக போர் நிறுத்தம் அறிவித்திருந்ததது. இந்நிலையில் இரண்டாவது முறையாக புதிய போர் நிறுத்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.