உலகம்

ரோஹிங்யா விவகாரம் மியான்மருக்கு மிகப்பெரிய சவால் - ஆங் சான் சூச்சி கருத்து

ரோஹிங்யா விவகாரம் மியான்மருக்கு மிகப்பெரிய சவால் - ஆங் சான் சூச்சி கருத்து

rajakannan

ரோஹிங்யா விவகாரம் மியான்மருக்கு மிகப்பெரிய சவால் என்று அந்நாட்டின் நிர்வாகத் தலைவர் ஆங் சான் சூச்சி தெரிவித்துள்ளார். 

மியான்மரின் மேற்கு எல்லையோரத்தில் அமைந்திருக்கும் மாநிலம் ராகினே எனப்படும் அராக்கன். பௌத்தர்கள் பெருமளவில் வசிக்கும் இந்தப் பகுதியில், ரோஹிங்யா என்ற இனத்தவரும் கணிசமாக வாழ்கின்றனர். 1948 ஆம் ஆண்டு பர்மா விடுதலை பெற்ற பிறகும், 1971-இல் வங்கதேச விடுதலைப் போர் நடந்தபோதும், ராகினே பிராந்தியத்தில் குடியேறியவர்கள் இவர்கள். இவர்கள் அனைவரும் இஸ்லாமிய மதத்தைப் பின்பற்றுபவர்கள்.

மியான்மர் பாதுகாப்புப் படைகளும், சில பௌத்த மதக் குழுக்களும் ரோஹிங்யா மக்கள் மீது தாக்குதல் நடத்தி வருகிறார்கள். சட்டவிரோதமாக அடைத்து வைத்தல், சித்திரவதை, கொத்தடிமை முறை என பல வழிகளிலும் ரோஹிங்யா மக்களுக்கு எதிராக அடக்குமுறை கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளது. 

ரோஹிங்யா இனத்தைச் சேர்ந்த மக்கள் வங்கதேசம் உள்ளிட்ட அண்டை நாடுகளுக்கு அகதிகளாகத் தஞ்சம் புகுந்துள்ளனர். வங்கதேசத்தில் மட்டும் சுமார் 1 லட்சம் மியான்மர் அகதிகள் இருக்கின்றனர். இதுவரை சுமார் 3 லட்சம் பேர் மியான்மரிலிருந்து வெளியேறிவிட்டதாக மனித உரிமை அமைப்புகள் கூறுகின்றன.
இந்நிலையில் பிரதமர் மோடி மியான்மர் சென்றிருக்கிறார். அவருடன் தனது தந்தையான ஆங் சானின் நினைவிடத்துக்கு சென்ற ஆங் சான் சூச்சி, பல்வேறு விவகாரங்கள் குறித்துப் பேசினார். இஸ்லாமியர் வசிக்கும் ராகினே பிராந்தியத்தில் அமைதியை ஏற்படுத்துவதற்கான முயற்சிகளை அரசு மேற்கொண்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டார். ரோஹிங்கியா விவகாரம் மியான்மருக்கு மிகப்பெரிய சவால் என்றும் அவர் கூறினார்.