ரோஹிங்ய முஸ்லிம்கள் மீதான தாக்குதல் சம்பவத்தை தொடர்ந்து ஐ.நா.பொதுக் கூட்டத்தை மியான்மர் தலைவர் ஆங் சான் சூச்சி அதிரடியாக புறக்கணித்துள்ளார்.
மியான்மரில் ரோஹிங்ய முஸ்லிம்களுக்கு எதிராக நடத்தப்படும் தாக்குதல்களுக்கு சர்வதேச நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றன. குறிப்பாக அண்டை நாடான வங்கதேசம், இந்த தாக்குதலுக்கு மியான்மர் ராணுவமே காரணம் என குற்றம்சாட்டியுள்ளது. இந்நிலையில் ரோஹிங்ய முஸ்லிம்கள் விவகாரம் குறித்து முடிவு எடுப்பதற்காக ஐ.நா. பொதுக் கூட்டம் இன்று நடைபெறவுள்ளது.
இதில் ஆங் சான் சூச்சி அவசியம் பங்கேற்க வேண்டும் என பல்வேறு நாடுகள் வலியுறுத்தி வந்தன.
இந்தக்கூட்டத்தில் ஆங் சான் சூச்சி பங்கேற்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், திடீரென கூட்டத்தை புறக்கணிக்க முடிவு செய்துள்ளார் என தகவல்கள் வெளியாகியுள்ளன. அவருக்குப் பதிலாக துணை அதிபர் ஹென்ரி வான் பங்கேற்பார் என மியான்மர் அரசின் செய்தி தொடர்பாளர் ஜா தே தெரிவித்துள்ளார்.
மியான்மரின் ஜனநாயக தலைவராக கடந்த ஆண்டு செப்டம்பரில் பொறுப்பேற்ற ஆங் சான் சூச்சி, ராகினேவில் அமைதி, ஸ்திரதன்மையை ஏற்படுத்த நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்திருந்தார். தற்போது அதற்கு மாறாக நடந்து வருவது, சர்வதேச அளவில் அவரது பெயருக்கு பெரும் களங்கத்தை ஏற்படுத்தி வருகிறது.