அமெரிக்கா-ஈரான் மோதல் காரணமாக ஹார்முஸ் நீரிணை மூடப்பட்டதால் உலகளாவிய எண்ணெய் வர்த்தகம் முடங்க, பொருளாதார நெருக்கடி தீவிரமடைந்துள்ளது. ஈரான், அமெரிக்க தாக்குதலால் ஏற்பட்ட சேதங்களுக்கு பில்லியன் டாலர் இழப்பீடு, தடைகள் நீக்கம், ராணுவப் படை வெளியேற்றம், கடற்படை முற்றுகை முடிவு போன்ற கடுமையான நிபந்தனைகள் வைத்துள்ளது. இதனால் போர் முடிவும், அமைதி ஒப்பந்தமும் சிக்கலில் சிக்கியுள்ளன.
அமெரிக்கா - ஈரான் இடையேயான போர் எப்போது முடிவுக்கு வரும், உலகளாவிய பொருளாதார சிக்கல்கள் எப்போது முற்றுபெறும் என்ற எதிர்ப்பார்ப்பில் தான் ஒட்டுமொத்த உலக நாடுகளும் எதிர்நோக்கியுள்ளன. அமெரிக்காவின் ஒவ்வொரு தாக்குதலுக்கும் பதிலடி கொடுத்துவரும் ஈரான், ஹார்முஸ் நீரிணையை மூடியது மட்டுமில்லாமல், அமைதி ஒப்பந்தத்தின் படி அமெரிக்காவின் தாக்குதல்களால் ஏற்பட்ட சேதங்களுக்குப் பில்லியன் கணக்கான டாலர்களை அமெரிக்கா இழப்பீடாக வழங்க வேண்டும், ஈரான் மீதான அனைத்துப் பொருளாதாரத் தடைகளையும் முழுமையாகத் திரும்பப் பெற வேண்டும், மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலைகொண்டுள்ள அமெரிக்க ராணுவப் படைகளை உடனடியாக வெளியேற்ற வேண்டும், ஈரானிய கடற்பரப்பில் அமெரிக்கா மேற்கொண்டு வரும் கடற்படை முற்றுகையை முழுமையாக முடிவுக்குக் கொண்டுவர வேண்டும் என்ற பல முக்கிய நிபந்தனைகளை விதித்துள்ளது..
ஈரானின் நிபந்தனைகள் இப்படி இருக்க, அமெரிக்காவோ ஈரான் அணு ஆயுதங்களை முற்றிலும் கைவிட வேண்டும், எதிர்காலத்திலும் எந்தவிதமான அணு ஆயுதங்களை வைத்திருக்கக் கூடாது என்ற நிபந்தனையை முக்கியமாக வைத்துள்ளது.
இந்தசூழலில் தொடர்ந்து ஹார்முஸ் நீரிணை மூடப்பட்டிருப்பதால் உலகளாவிய எண்ணெய் வர்த்தகம் மிகப்பெரிய அளவில் முடங்கியுள்ளது. இதனை சரிசெய்ய அமெரிக்க அதிபர் ட்ரம்ப், ஈரானிடம் வைக்கப்பட்ட மூலோபய கோரிக்கையான அணு ஆயுதங்களை கைவிடவேண்டும் என்ற நிபந்தனையை கைவிட முடிவெடுத்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
'தி வால் ஸ்ட்ரீட் ஜர்னல்' பத்திரிகை வெளியிட்டிருக்கும் அறிக்கையின் படி, ஈரான் ஹார்முஸ் நீரிணையை முழுமையாக மீண்டும் திறந்தால், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஈரானுடனான அணுசக்தி ஒப்பந்தம் செய்யும் முயற்சியைக் கைவிடத் தயாராக இருப்பதாக அதிகாரிகளிடம் கூறியதாக தெரிவித்துள்ளது.
மேலும், ஈரானுடன் விரிவான அணுசக்தி ஒப்பந்தத்தை மேற்கொள்வதை விட, உலகளாவிய கச்சா எண்ணெய் வர்த்தகத்திற்கு மிகவும் முக்கியமான ஹார்முஸ் ஜலசந்தியை மீண்டும் திறப்பதையே தனது முதன்மை இலக்காக டிரம்ப் கருதுவதாகவும் அறிக்கை வெளிப்படுத்துகிறது. ஆனால் ட்ரம்ப்பின் இந்த நோக்கத்திற்கு ஈரான் வைத்திருக்கும் முக்கிய நிபந்தனைகள் சிக்கலாக அமையலாம் எனத் தெரிகிறது. போர் விரைவில் முடிவை எட்ட சவூதி அரேபியா தொடர்ந்து டிரம்புடன் தீவிர பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுவருவது குறிப்பிடத்தக்கது.