ஈரான், அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இடையிலான போர் 4-ஆவது வாரத்தை எட்டியிருக்கும் நிலையில், வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்க ராணுவத் தளவாடங்கள் மீது தாக்குதல் நடத்தி வரும் ஈரான், உலகின் 20 சதவீதம் கச்சா எண்ணெய் வர்த்தகம் நடக்கும் ஹார்முஸ் நீரிணைப் பகுதியை ஈரான் முடக்கிவைத்துள்ளது. இதன்காரணமாக உலகளவில் எரிவாயு தட்டுப்பாடு ஏற்பட்டிருக்கிறது. குறிப்பாக, இந்தியாவின் பல்வேறு நகரங்களில் சமையல் எரிவாயு தட்டுப்பாடு காரணமாக, உணவகங்களில் விலையேற்றமும், உணவகங்கள் மூடலும் நடைபெற்று வருகின்றன.
இச்சூழலில் தான், அமெரிக்க அதிபர் ட்ரம்ப் சில தினங்களுக்கு முன்பு ஈரான் ஹார்மூஸ் நீரிணையைத் திறக்கவில்லை என்றால் அந்நாட்டின் மின்சார உற்பத்தி நிலையங்கள் மீது தாக்குதல் நடத்துவோம் என எச்சரிக்கை விடுத்திருந்தார். ஆனால் அடுத்த ஒரு சில மணிநேரங்களில் ஈரானும், எதிரி நாட்டுக் கப்பல்களைத் தவிர மற்ற கப்பல்கள் கடந்து செல்லலாம் என தெரிவித்தது. தொடர்ந்து, ஈரான் மற்றும் அமெரிக்கா இடையிலான சுமுக பேச்சுவார்த்தை காரணமாக 5 நாட்களுக்கு ஈரான் மீதான தாக்குதலை நிறுத்தப்போவதாக ட்ரம்ப் தெரிவித்திருக்கிறார். இந்நிலையில், மத்திய கிழக்கில் அமைதி திரும்பும் சூழல் உருவாகியிருப்பதாக பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், ஹார்முஸ் ஜலசந்தியில் சிக்கியிருந்த இந்தியக் கப்பல்கள் ஒவ்வொன்றாகப் பாதுகாப்பாக வெளியேறி வருகின்றன. அந்த வகையில், 'பைன் கேஸ்' மற்றும் 'ஜக் வசந்த்' ஆகிய இரண்டு பெரிய சமையல் எரிவாயு சுமந்து வரும் கப்பல்கள் நேற்று மாலை வெற்றிகரமாக ஜலசந்தியைக் கடந்து இந்தியாவை நோக்கிப் பயணிக்கத் தொடங்கியுள்ளன. பைன் கேஸ்' கப்பல் தற்போது ஓமன் கடற்பரப்பைக் கடந்து அரபிக் கடலில் மணிக்கு 12 நாட்டிக்கல் மைல் வேகத்தில் இந்தியா நோக்கி வந்துகொண்டிருக்கிறது. இந்தக் கப்பல்கள் வரும் மார்ச் 26 முதல் 28-க்குள் இந்தியத் துறைமுகங்களை வந்தடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஈரான் அதிகாரிகளின் அனுமதியுடன், அந்நாட்டின் லாரக் மற்றும் கெஷ்ம் தீவுகளுக்கு இடையே உள்ள பாதுகாப்பான கடல்வழிப் பாதையைப் பயன்படுத்தி இந்தக் கப்பல்கள் வெளியேறியுள்ளன.
தாக்குதல்களில் இருந்து தப்பிக்க, இந்தக் கப்பல்கள் தங்கள் இருப்பிடத்தைக் காட்டும் கருவியில் "இந்தியக் கப்பல் மற்றும் இந்திய ஊழியர்கள்" என்ற செய்தியைத் தொடர்ந்து ஒளிபரப்பி வருகின்றன. 'பைன் கேஸ்' மற்றும் 'ஜக் வசந்த்' ஆகிய இரு கப்பல்களும் இணைந்து சுமார் 92,612 டன் எடையுள்ள சமையல் எரிவாயுவைச் சுமந்து வருகின்றன. பிப்ரவரி 28 அன்று போர் தொடங்கியதில் இருந்து சுமார் 22 இந்தியக் கப்பல்கள் இந்தப் பகுதியில் சிக்கியிருந்தன. பிரதமர் மோடி ஈரான் அதிபருடன் நடத்திய பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து, இந்தக் கப்பல்களுக்குப் பாதுகாப்பான வழித்தடம் கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.