உலகம்

நிபந்தனைகளுடன் இலங்கையிலிருந்து விடுதலை செய்யப்பட்ட 7 தமிழக மீனவர்கள்!

webteam

தமிழக மீனவர்கள் ஏழு பேரை நிபந்தனைகளுடன் இலங்கை நீதிமன்றம் விடுதலை செய்து உத்தரவிட்டுள்ளது.

கடந்த மாதம் 27 ஆம் தேதி ராமேஸ்வரத்தில் இருந்து மைக்கேல் ராஜ் என்பவருக்கு சொந்தமான விசைபடகில் கிளிண்டன், பேதுகு, வினிஸ்டன், தயான், மரியான், தானி, ஆனஸ்ட் ஆகிய ஏழு மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்குச் சென்றுள்ளனர். அப்போது ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த இலங்கை கடற்படையினர், எல்லை தாண்டி மீன் பிடித்ததாக குற்றம்சாட்டி 7 பேரை கைது செய்து காரைநகர் கடற்படை முகாமுக்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர்.

இதையடுத்து மீனவர்கள் அனைவரும் ஊர்காவல்துறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி யாழ்ப்பாணம் சிறையில் அடைக்கப்பட்டனர். இதைத் தொடர்ந்து மீனவர்களின் வழக்கு இன்று இரண்டாவது முறையாக ஊர்காவல்துறை நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது இந்த வழக்கு விசாரித்த நீதிபதி கஜநீதிபாலன் மீனவர்களை நிபந்தனைகளுடன் விடுதலை செய்து உத்தரவிட்டார்.

இதைத் தொடர்ந்து மீனவர்கள் பயன்படுத்திய படகுக்கான விசாரணை வரும் ஜனவரி மாதம் 27ஆம் தேதி நடைபெறும் எனவும் தெரிவித்தார். இதையடுத்து விடுதலை செய்யப்பட்ட ஏழு பேரும் யாழ்ப்பாணத்தில் உள்ள இந்திய துணைத் தூதரக அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.