உலகம்

யுனிசெஃப்பின் நல்லெண்ணத் தூதரானார் 19 வயது அகதி

யுனிசெஃப்பின் நல்லெண்ணத் தூதரானார் 19 வயது அகதி

webteam

ஐக்கிய நாடுகள் அவையின் குழந்தைகள் நல அமைப்பான யுனிசெஃப்பின் நல்லெண்ண தூதராக 19 வயதான சிரிய அகதியான முசூன் அல்மெல்லீஹன் நியமிக்கப்பட்டுள்ளார். 

இந்த அறிவிப்பை யுனிசெஃப்பின் துணை நிர்வாக இயக்குனர் ஜஸ்டின் ஃபார்ஸித் வெளியிட்டார். அகதியான ஒருவர் யுனிசெஃப் அமைப்பின் நல்லெண்ண தூதராக நியமிக்கப்படுவது இதுவே முதல்முறை என்றும் அவர் கூறினார். உள்நாட்டுப் போரால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள சிரியாவைச் சேர்ந்த முசூன், ஜோர்டான் நாட்டிலுள்ள ஜாட்டாரி அகதிகள் முகாமில் வசித்து வருகிறார். பெண் குழந்தைகளின் கல்விக்காக தொடர்ந்து குரல்கொடுத்து வரும் முசூன், தனது சொந்தநாடான சிரியாவில் இருந்து வெளியேறியபோது, புத்தகத்தை மட்டுமே எடுத்து வந்ததாக நெகிழ்ச்சியுடன் கூறுகிறார். அகதிகளாக சொந்த நாட்டை விட்டு வெளியேறும் குழந்தைகளுக்கு சிறுவயதிலேயே திருமணம் செய்துவைக்கப்படும் போது, அவர்கள் படும்பாட்டினை தான் நேரடியாக பார்த்து உணர்ந்துள்ளதாகக் கூறும் அவர், பெண் குழந்தைகளின் முன்னேற்றத்துக்காக யுனிசெஃப்ஃபுடன் இணைந்து பணியாற்றுவது மகிழ்ச்சியளிக்கும் எனக் கூறுகிறார். யுனிசெஃப்பின் நல்லெண்ண தூதராக இருந்த மறைந்த நடிகை ஆட்ரே ஹெப்பர்னினைப் பின்பற்றி, தனது பணியைத் தொடரப் போவதாகவும் அவர் கூறினார்.