உலகம்

அப்பப்பா..! கொடூர ட்ராஃபிக்..! சொந்த ஊருக்கு கிளம்பிய மக்களால் திக்குமுக்காடிய பாரிஸ்..!

webteam

கொரோனாவின் அச்சுறுத்தல் காரணமாக உலக நாடுகள் ஊரடங்கை அமல்படுத்தின. பின்னர் நாட்கள் ஓட ஓட ஊரடங்கில் மெல்ல தளர்வுகள் கொண்டு வரப்பட்டன. கடைகள் திறக்கப்பட்டன. பேருந்து சேவை தொடங்கப்பட்டது. இப்படியாக அரசுகளும் மக்களும் மெல்ல மெல்ல இயல்பு நிலைக்கு திரும்பி வருகின்றனர். கொரோனா பாதிப்பும் மெல்ல மெல்ல குறைந்து வருவதாக அரசு தெரிவித்துள்ளது. ஆனால் பிரான்ஸில் இரண்டாம் கட்ட ஊரடங்கு மீண்டும் அமல்படுத்தப்பட்டுள்ளது.

கொரோனாவின் இரண்டாவது அலை அடிக்கத்தொடங்கியதால் முழு ஊரடங்கை அந்நாட்டு அரசு அமல்படுத்தியுள்ளது. முக்கிய மற்றும் மருத்துவ பணிகளுக்கு மட்டுமே மக்கள் வெளியே வரவேண்டுமென அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. இது குறித்து தெரிவித்துள்ள அந்நாட்டு பிரதமர் இது கொரோனாவின் இரண்டாவது அலை. முதல் தாக்குதலைவிட கடுமையானதாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை என தெரிவித்துள்ளார். இதற்கிடையே அரசின் திடீர் ஊரடங்கு அறிவிப்பால் பாரீஸ் நகரத்தை சுற்றி வாகனங்கள் அணிவகுத்தன.

மக்கள் அவரவர்களின் சொந்த ஊருக்கு அவசரம் அவசரமாக கிளம்பினர். இதனால் வரலாறு காணாத வாகன நெரிசலை பிரான்ஸ் நேற்று சந்தித்தது.கிட்டத்தட்ட 700கிமீக்கு இந்த வாகன நெரிசல் இருந்ததாக அந்நாட்டு ஊடகம் தெரிவித்துள்ளது.

உயரமான கட்டடத்தில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு வீடியோவும் வைரலாகி வருகின்றது. காரின் விளக்குகளால் சாலைகள் நிரம்பி இருக்கும் நிலையில் எறும்பு ஊர்வதை போல கார்கள் ஊர்ந்து செல்கின்றன. ஊரடங்கு அறிவிப்பை அடுத்து மக்கள் அனைவரும் ஒரே நேரத்தில் வெளியே கிளம்பியதால் இந்த மெகா ட்ராஃபிக் ஏற்பட்டதாக கூறப்பட்டுள்ளது.