உலகம்

தமிழக மீனவர்கள் ஜாமீன் கிடைக்க ரூ.1 கோடி செலுத்த வேண்டும் - இலங்கை நீதிமன்றம் உத்தரவு

ஜா. ஜாக்சன் சிங்

இலங்கை சிறையில் உள்ள தமிழக மீனவர்கள் ஜாமீனில் செல்ல வேண்டுமானால், ரூ.1 கோடி பிணைத் தொகை செலுத்த வேண்டும் என அந்நாட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ராமேஸ்வரத்தை சேர்ந்த மீனவர்கள், கடந்த மாதம் 24-ம் தேதி தனுஷ்கோடி - தலைமன்னார் இடையே மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது அப்பகுதிக்கு ரோந்து வந்த இலங்கை கடற்படையினர், எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி 12 மீனவர்களை கைது செய்தனர்.

மேலும், அவர்களின் விசைப்படகையும் பறிமுதல் செய்தனர். இதையடுத்து, அவர்கள் கிளிநொச்சி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். இதில் மீனவர்கள் 12 பேரையும் ஏப்ரல் 7-ம் தேதி (இன்று) வரை யாழ்ப்பாணம் சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவு பிறப்பித்திருந்தார்.

இதையடுத்து, சிறைக் காவல் முடிந்து இன்று மீண்டும் கிளிநொச்சி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட 12 மீனவர்களை வருகின்ற மே 12-ம் தேதி வரை யாழ்ப்பாணம் சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார். மேலும், மீனவர்கள் ஜாமீனில் செல்ல வேண்டுமென்றால் ஒரு மீனவருக்கு தலா ரூ. 1 கோடி செலுத்த வேண்டும் எனவும் அவர் அறிவுறுத்தினார்.