இந்தோனேஷியாவில் ஏற்பட்ட பலத்த நிலநடுக்கத்தால் சுனாமி வருவதற்கு வாய்ப்புள்ளதாக அந்நாட்டு தேசிய பேரழிவு தடுப்பு அமைப்பு தெரிவித்துள்ளது.
இந்தோனேஷியாவின் லம்போக் தீவில் உள்ள பாலி பகுதியில் கடந்த 29ஆம் தேதி பலத்த நிடுநடுக்கம் ஒன்று ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 6.4 ஆக பதிவாகியது. இந்த நிலநடுக்கத்தில் 16 பேர் உயிரிழந்தனர்.
இந்நிலையில் இந்தோனேஷியாவின் தென்கிழக்கு லோலோனில் இன்று மாலை மீண்டும் பலத்த நிலநடுக்கம் ஒன்று ஏற்பட்டுள்ளது. கடந்த ஒருவாரத்தில் லம்போக் தீவில் ஏற்படும் இரண்டாவது பலத்த நிலநடுக்கம் இதுவாகும். இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 7.0 ஆக பதிவாகியுள்ளது என அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அத்துடன் இது 2 கிலோமீட்டர் ஆழத்திற்கும், 10.5 கி.மீ சுற்றுவட்டாரத்திலும் ஏற்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இந்த பலம் வாய்ந்த நிலநடுக்கத்தால் சுனாமி வரும் வாய்ப்புக்கள் உள்ளதாக தேசிய பேரழிவு தடுப்பு அமைப்பு எச்சரித்துள்ளது.
தற்போது நிலநடுக்கம் ஏற்பட்டுள்ள தீவு ஏற்கனவே கட்டடங்கள் கட்டுவதற்கு அதிக கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்ட பகுதியாகும். இங்கு ஓட்டல்களோ அல்லது மற்ற கட்டடங்களோ ஒரு தெண்ணை மரத்தை விட உயரமாக இருக்கக்கூடாது என்பது குறிப்பிடத்தக்கது.