பாகிஸ்தானில் நடந்த அமெரிக்கா–ஈரான் அமைதி பேச்சுவார்த்தை தோல்வியடைந்த நிலையில், மத்திய கிழக்கில் போர் வெடிக்கும் அச்சம் அதிகரித்துள்ளது. இதை சமாளிக்க ரஷ்ய அதிபர் புதின், ஈரான் மற்றும் இஸ்ரேல் தலைவர்களுடன் அவசரமாக பேசி, அரசியல் தீர்வுக்கான மத்தியஸ்தம் செய்யத் தயாரென அறிவித்துள்ளார். லாவ்ரோவின் திடீர் ஈரான் பயணமும் சூழ்நிலையை தீவிரப்படுத்தியுள்ளது.
பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் ஈரான் மற்றும் அமெரிக்கா இடையே நடைபெற்ற அமைதி பேச்சுவார்த்தை தோல்வியைத் தழுவியதாக இரு தரப்பும் அறிவித்துள்ளன. இதனால் மீண்டும் இரு நாடுகளுக்கு இடையே போர் நடைபெறும் என்ற அச்சம் எழுந்துள்ளது.
இந்த சூழலில் அமைதி பேச்சுவார்த்தைக்கான களத்தில் ரஷ்யா குதித்துள்ளது உலகளவில் கவனம் ஈர்த்துள்ளது. பாகிஸ்தானில் பேச்சுவார்த்தை தோல்வியைத் தழுவிய உடனேயே, ரஷ்ய அதிபர் புதின் ஈரான் மற்றும் இஸ்ரேல் ஆகிய இரு நாடுகளின் உயர்மட்டத் தலைவர்களுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசியதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
இது குறித்து ரஷ்யா அதிபர் மாளிகையான கிரெம்ளின் வெளியிட்ட அறிக்கையில், மத்திய கிழக்கில் அமைதியை நிலைநாட்டும் முயற்சிகளுக்கு மத்தியஸ்தம் செய்ய, தான் தயாராக இருப்பதாக, ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் ஈரானியத்அமைச்சர் மசூத் பெசெஷ்கியானிடம் பேசியதாக கூறப்பட்டுள்ளது.
மேலும் இந்த இரு தரப்பினர் இடையே ஒரு அரசியல் மற்றும் இராஜதந்திரத் தீர்வை எட்டுவதற்கான தேடலை எளிதாக்கவும், மத்திய கிழக்கில் ஒரு நியாயமான மற்றும் நீடித்த அமைதியை அடைவதற்கான முயற்சிகளில் மத்தியஸ்தம் செய்வது குறித்தும் பேசப்பட்டது என்றும் இந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
அதோடு, ரஷ்ய வெளியுறவுத் துறை அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ், (Sergey Lavrov) ஈரானுக்கு ஒரு அவசரப் பயணத்தை மேற்கொண்டு, ஈரானியத் தலைவர்களுடன் நேரிடையாக பேசியதாகவும் கூறப்படுகிறது. அதே நேரம் ரஷ்யா உக்ரைன் போருக்காக ஈரானின் ட்ரோன்களைப் பயன்படுத்தி வருவதோடு, ஈரானுக்கு ரஷ்யா ஆயுத உதவியும் வழங்கி வருகிறது.
இந்த சூழலில், அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் ஆகிய நாடுகள் ரஷ்யாவின் தலையீட்டை ஏற்குமா என்றும் கேள்வி எழுந்துள்ளது. அதே நேரம் ரஷ்யாவால் மட்டுமே ஈரானை பணியவைக்க முடியும் என்பதால் ரஷ்யாவின் அமைதி பேச்சுவார்த்தையை அமெரிக்கா ஏற்கவும் வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.