உலகம்

கருப்பினத்தவர் ஜார்ஜ் ஃப்ளாய்ட் கொலையான வீடியோவை எடுத்த பெண்ணுக்கு கிடைத்த உயரிய கவுரவம்

JustinDurai
அமெரிக்காவில் காவல்துறையினரால் கருப்பினத்தை சேர்ந்த ஜார்ஜ் ஃப்ளாய்ட் கொல்லப்பட்டபோது அதனை வீடியோ எடுத்த பெண்ணுக்கு உலகின் உயரிய கவுரவமான புலிட்சர் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
 
கடந்த ஆண்டு மே மாதம் 25ஆம் தேதி அமெரிக்காவின் மின்னபோலிஸ் நகரில் கருப்பினத்தவரான ஜார்ஜ் பிளாய்ட் கொலை செய்யப்பட்டது உலகம் முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தியது. டெரிக் சாவின் என்ற காவல் அதிகாரி ஃபிளாய்டின் கழுத்தில் தனது முழங்காலை வைத்து அழுத்தியதில் அவர் உயிரிழந்தார்.
 
இதனை வீடியோவாக பதிவு செய்தவர் டார்னெல்லா ஃபிரேசியர் என்ற இளம்பெண். அப்போது அவருக்கு வயது 17. ஜார்ஜ் ஃபிளாய்டின் கொலை வெளி உலகிற்கு தெரிய மிக முக்கிய காரணம் அந்த வீடியோ தான். உலகம் முழுவதும் பரவிய வீடியோவால் பலரும் காவல் அதிகாரிக்கு கண்டனம் தெரிவித்தனர். அமெரிக்காவில் போராட்டம் வெடித்தது. போலீஸ் அதிகாரி டெரிக் சாவின் பணி நீக்கம் செய்யப்பட்டார். வழக்கு விசாரணை முடிந்து தண்டனையும் கிடைத்துள்ளது.
 
இந்நிலையில் அந்த வீடியோவை பதிவு செய்த இளம்பெண் டார்னெல்லா ஃபிரேசியருக்கு உலகின் உயரிய கவுரவம் என கருதப்படும் புலிட்சர் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. புலிட்சர் விருது 1917ஆம் ஆண்டு முதல் ஊடகம், இலக்கியம், இசை ஆகிய துறைகளுக்கு வழங்கப்படுகிறது. அந்த வகையில் டார்னெல்லா ஃபிரேசியர் ஊடக பிரிவில் புலிட்சர் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார்.