security near embassy  Reuters
உலகம்

பாகிஸ்தான் | ஈரான் உச்சத் தலைவர் காமேனி கொலை.. அமெரிக்க தூதரகம் மீதான தாக்குதலில் 9 பேர் பலி!

ஈரானில் காமேனியைக் கொன்றதை அடுத்து, பாகிஸ்தானின் துறைமுக நகரமான கராச்சியில் உள்ள அமெரிக்க தூதரகத்திற்குள் நூற்றுக்கணக்கான மக்கள் நுழைந்து ஜன்னல்களை உடைத்து போராட்டத்தில் ஈடுபட்டதில் 9 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

PT WEB

காமேனி கொலைக்கு எதிராக பாகிஸ்தானில் அமெரிக்க தூதரகம் மீது தாக்குதல் நடத்தப்பட்டு, 9 பேர் பலியாகினர். ஈரானில் 40 நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படும் நிலையில், போராட்டங்கள் தீவிரமடைந்துள்ளன. ஈரான் அதிபர் பெசஷ்கியான், அமெரிக்கா, இஸ்ரேலுக்கு பதிலடி தருவோம் என உறுதியளித்துள்ளார்.

ஈரானுக்கும் அமெரிக்காவிற்கும் இடையே கடந்த சில மாதங்களாக தொடர்ந்து போர் பதற்றம் நிலவி வந்த நிலையில், நேற்று (சனிக்கிழமை பிப்.28) இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா ஆகிய இரு நாடுகள் இணைந்து ஈரானின் தலைநகர் தெஹ்ரான் உள்ளிட்ட பகுதிகள் மீது தாக்குதல் நடத்தியது. இந்தத் தாக்குதலில் ஈரானின் உச்சத் தலைவர் காமேனி மற்றும் அவரது குடும்பத்தினர் கொல்லப்பட்டுவிட்டதாக ஈரான் ஊடகங்கள் தெரிவித்துள்ளன. அந்நாட்டில் 40 நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படுவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது

police gather after the protests

இந்த நிலையில், ஈரானில் காமெனி கொலை செய்யப்பட்டதைக் கண்டித்து பாகிஸ்தானின் துறைமுக நகரமான கராச்சியில் உள்ள அமெரிக்க தூதரகத்திற்குள் நூற்றுக்கணக்கான மக்கள் நுழைந்து ஜன்னல்களை உடைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதன் காரணமாக, அங்கிருந்த பாதுகாப்பு படையினர் நடத்திய தாக்குதலி 9 போராட்டக்காரர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

இந்த சம்பவத்தின் காட்சிகள் சமூக ஊடகங்களில் வெளியாகி, தூதரகத்தின் நுழைவாயில் பகுதியை ஒரு கும்பல் சேதப்படுத்துவதைக் காட்டியது. அவர்கள் கட்டிடத்தின் சில பகுதிகளுக்கு தீ வைத்ததாகக் கூறப்படுகிறது.

பாகிஸ்தானின் பிற பகுதிகளிலும் பெரிய போராட்டங்கள் வருவதாக தகவல்கள் வெளியாகியிருக்கின்றன. பாகிஸ்தானின் வடக்கு நகரமான ஸ்கர்டுவில் உள்ள ஐக்கிய நாடுகள் சபை அலுவலகக் கட்டிடத்திற்கும் போராட்டக்காரர்கள் தீ வைத்ததாக அல்ஜசீரா செய்தி நிறுவனம் தெரிவித்திருக்கிறது.

அதேசமயம், கில்கிட் பல்டிஸ்தான் ஐ.நா. அலுவலகத்திற்கு வெளியே ஏராளமான போராட்டக்காரர்கள் கூடி கட்டிடத்தை எரித்தனர் என உள்ளூர் அரசாங்க செய்தித் தொடர்பாளர் ஷபீர் மிர் ஆங்கில செய்தி நிறுவனம் ஒன்றிடம் உறுதிபடுத்தியுள்ளார், மேலும் எந்த உயிரிழப்பும் ஏற்படவில்லை என்றும் கூறியிருக்கிறார்.