உலகம்

பெருவில் கொரோனா அச்சம்: சிறையில் ஏற்பட்ட வன்முறையில் 9 கைதிகள் உயிரிழப்பு

webteam

கொரோனா வைரஸ் அச்சத்தால் பெரு நாட்டில் உள்ள சிறையில் ஏற்பட்ட வன்முறையில் 9 கைதிகள் உயிரிழந்தனர்.

அமெரிக்க நாடுகளில் பெருவில் தான் கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ளது. பெருவின் லிமா நகரில் உள்ள சிறையில் கைதிகள் இருவர் கடந்த திங்களன்று கொரோனாவால் உயிரிழந்தனர். மேலும் 600க்கும் மேற்பட்ட கைதிகள், 100க்கும் அதிகமான சிறைக்காவலர்களுக்கும் நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டதால், சக கைதிகள் இடையே அச்சம் நிலவியது.

தங்களை உடனடியாக சிறையில் இருந்து விடுவிக்கக்கோரி அவர்கள், போராட்டத்தில் ஈடுபட்டனர். சிறையில் இருந்த வெளியேற முயன்ற கைதிகள், பாதுகாவலர்களை நோக்கி கற்கள் உள்ளிட்டவைகளால் தாக்கியதால் வன்முறை வெடித்தது. பாதுகாப்பு படையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 9 கைதிகள் உயிரிழந்தனர்.

மேலும் பலர் ஆபத்தான நிலையில் உள்ளனர். இந்த வன்முறையில் பாதுகாப்பு படையினரும் ஏராளமானோர் பாதிக்கப்பட்டுள்ளதாக சிறைத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.