உலகம்

எலிசபெத் மகாராணி கணவரின் கார் விபத்து - அதிர்ச்சியில் உறைந்த இளவரசர்

எலிசபெத் மகாராணி கணவரின் கார் விபத்து - அதிர்ச்சியில் உறைந்த இளவரசர்

webteam

பிரிட்டன் மகாராணி எலிசபெத்தின் கணவரும், இளவரசருமான பிலிப் ஓட்டிச் சென்ற கார் விபத்துக்குள்ளானது.

பிரிட்டன் மகாராணி இரண்டாம் எலிசபத்தின் கணவரும், இளவரசருமான 97 வயதான பிலிப்,  சண்ட்ரிஹாம் எஸ்டேட் என்ற இடத்தில் காரை ஓட்டி சென்றார். அப்போது மற்றொரு கார் மீது மோதி பிலிப்பின் கார் விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் பிலிப்பின் கார் தலைகீழாக கவிழ்ந்ததாக விபத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்துள்ளனர். காரில் சிக்கிய பிலிப் உடனடியாக மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அவருக்கு எந்தக் காயமும் ஏற்படவில்லை என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். 

விபத்தில் சிக்கிய மற்றொரு காரில் பயணித்த இருவர் காயமடைந்துள்ளனர். இரு தரப்பினரும் மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டவில்லை என்பது தெரிய வந்துள்ளது. பிரிட்டன் அரண்மனையும் அவர் நலமுடன் இருப்பதை உறுதி செய்துள்ளது. காரில் சிக்கிய இளவரசரை மீட்ட போது அவர் அதிர்ச்சியில் உறைந்திருந்ததாக அங்கிருந்த மக்கள் தெரிவிக்கின்றனர். 97 வயதானாலும் இளவரசர் பிலிப் பெரும்பாலும் சொந்தமாக கார் இயக்குவதை விரும்புவார் என சொல்லப்படுகிறது. கடந்த 2016ஆம் ஆண்டு முன்னாள் அமெரிக்க அதிபர் ஒபாமா, அவரது மனைவி மிச்செல் ஒபாமா மற்றும் மகாராணியை, பிலிபிதான் காரில் அழைத்து சென்றார்.