உலகம்

குண்டுவெடிப்பு சம்பவம் தொடர்பாக 8 பேர் கைது - பிரதமர் ரணில் விக்ரமசிங்கே

webteam

இலங்கை குண்டு வெடிப்பு சம்பவம் தொடர்பாக 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு பிரதமர் ரணில் விக்ரமசிங்கே கூறியுள்ளார்.

இலங்கையில் ஈஸ்டர் தினமான இன்று, கொழும்பு நகரில் உள்ள சில தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனையில் கிறிஸ்தவர்கள் ஈடுபட்டிருந்தனர். அப்போது யாரும் எதிர்பாராதவிதமாக நான்கு தேவாலயங்களில் ஒரே நேரத்தில் குண்டுவெடிப்பு நடந்தது. அத்துடன் இரண்டு ஓட்டல்கள், குடியிருப்புப் பகுதி என மொத்தம் 8 இடங்களில் அடுத்தடுத்து குண்டு வெடிப்புகள் நடந்தன. இதில் 200க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர் மேலும் நூற்றுக்கணக்கானோர் காயமடைந்துள்ளனர்.

இதனையடுத்து உலக நாடுகள் மற்றும் தலைவர்கள் இச்சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்துவருகின்றனர். இச்சம்பவம் தொடர்பாக 7 பேர் கைது செய்யப்பட்டு, விசாரணை நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளியாயின. இதற்கிடையே கொழும்புவில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. சமூக வலைத்தளங்கள் மற்றும் தொலைத்தொடர்புத்துறை ஆகியவை துண்டிக்கப்பட்டுள்ளது. இந்தக் குண்டு வெடிப்பு சம்பவத்தை தொடர்ந்து இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கே பாதுகாப்பு துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். 

இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த ரணில் விக்ரமசிங்கே, “இது ஒரு துரதிருஷ்டமான சம்பவம். இச்சம்பவம் மிகவும் கண்டனத்திற்குரியது. இந்த இக்கட்டான சூழ்நிலையில் இலங்கை மக்கள் ஒன்றுபட்டு அமைதியாக இருக்கவேண்டும். மேலும் இச்சம்பவம் தொடர்பாக 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் அனைவரும் உள்ளூரை சேர்ந்தவர்கள். இந்த தாக்குதலுக்கும் வெளிநாட்டு பயங்கரவாத அமைப்புகளுக்கும் தொடர்பு இருக்கிறதா என்பது குறித்து விசாரிக்கப்பட்டு வருகிறது” எனத் தெரிவித்துள்ளார்.