இலங்கை குண்டுவெடிப்புகளில் உயிரிழந்தவர்களில் 9 பேர் வெளிநாட்டை சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்துள்ளது.
இலங்கை தலைநகர் கொழும்புவில் உள்ள தேவாலயம் மற்றும் 3 நட்சத்திர விடுதிகள், நீர் கொழும்பு, மட்டக்களப்பு ஆகிய இடங்களில் உள்ள தேவாலயங்களில் குண்டுவெடிப்பு நிகழ்ந்தது. இதில் 140 பேர் உயிரிழந்துள்ள நிலையில் 9 பேர் வெளிநாட்டை சேர்ந்தவர்கள் என்ற தகவல் வெளியாகியுள்ளது. அவர்கள் சுற்றுலாவுக்கு வந்தவர்கள் என தெரியவந்துள்ளது. இந்த தாக்குதலை தொடர்ந்து நாடு முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இலங்கை அதிபர் சிறிசேன, பிரதமர் ரணில் விக்ரமசிங்க, முன்னாள் அதிபர் ராஜபக்ச உள்ளிட்டோர் குண்டுவெடிப்பு சம்பவங்களுக்கு கண்டனம் தெரிவித்துள்ளனர். இது கோழைத்தனமான தாக்குதல் என்றும் மக்கள் தைரியமாக இருக்க வேண்டும் என்றும் ரணில் கேட்டுக் கொண்டுள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடியும் இலங்கை குண்டுவெடிப்புக்கு கண்டனம் தெரிவித்துள்ளார். டிவிட்டரில் பதிவிட்டுள்ள அவர், இது போன்ற காட்டுமிராண்டித்தனமான தாக்குதல்களுக்கு நமது பிராந்தியத்தில் இடமில்லை என கூறியுள்ளார். இலங்கை மக்களுக்கு இந்தியா துணை நிற்பதாக தெரிவித்துள்ள மோடி, பாதிக்கப்பட்டவர்களுக்காக பிரார்த்தனை செய்வதாக கூறியுள்ளார். இலங்கை தாக்குதலுக்கு முதலமைச்சர் பழனிசாமி மற்றும் துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் ஆகியோரும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.