உலகம்

இலங்கை ராணுவ செயலரை ராஜினாமா செய்ய அதிபர் சிறிசேன வலியுறுத்தல்

rajakannan

இலங்கை ராணுவ செயலர், காவல்துறை தலைவர் ஆகியோரை ராஜினாமா செய்ய அந்நாட்டு அதிபர் மைத்ரிபால சிறிசேன வலியுறுத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

ஈஸ்டர் பண்டிகை நாளான கடந்த ஞாயிற்றுக்கிழமை, இலங்கையின் பல்வேறு இடங்களில் அடுத்தடுத்து குண்டுகள் வெடித்தன. தேவாலயங்கள் மற்றும் நட்சத்திர விடுதிகளில் இந்தக் குண்டுவெடிப்பு தாக்குதல்கள் நடத்தப்பட்டன. இந்தத் தொடர் குண்டுவெடிப்பு சம்பவங்களில் 350-க்கும் மேற்பட்டோர் இதுவரை உயிரிழந்துள்ளனர்.  

குண்டுவெடிப்பு தாக்குதல் தொடர்பாக 10 நாட்களுக்கு முன்பே தகவல்கள் கிடைத்தும் தெரியவந்துள்ளது. இந்தியாவும் தாக்குதல் குறித்து எச்சரித்ததாக இலங்கை பிரதமர் நேற்று கூறியிருந்தார். ஆனால், தகவல்கள் கிடைத்தும் பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுக்காதது குறித்து இலங்கை மக்கள் மத்தியில் அதிருப்தி நிலவி வருகிறது. அதனால்தான், குண்டுவெடிப்பை தடுக்க தவறியதற்காக இலங்கை அரசு மக்களிடம் மன்னிப்பு கேட்டுக் கொண்டது.

இந்நிலையில்,  இலங்கை ராணுவ செயலர், காவல்துறைத் தலைவர் ஆகியோரை ராஜினாமா செய்ய அந்நாட்டு அதிபர் மைத்ரிபால சிறிசேன வலியுறுத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இருப்பினும் இதுதொடர்பாக அதிகாரப்பூர்வ தகவல் இன்னும் வெளிவரவில்லை.

குண்டுவெடிப்பு தாக்குதலை முறியடிக்க தவறியதை அடுத்து அவர் இந்த நடவடிக்கையை மேற்கொள்வதாக கூறப்படுகிறது. உளவுத்துறை பிரிவினரிடமிருந்து தகவல் கிடைத்தும் அதனைத் தம்மிடம் தெரிவிக்கவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.