உலகம்

மலேசியாவில் மதப் பிரசாரம் செய்ய ஜாகிர் நாயக்கிற்கு தடை!

webteam

மதபோகர் ஜாகிர் நாயக், மலேசியாவில் பிரசாரம் செய்ய அந்நாடு தடைவிதித்துள்ளது. 

மும்பையை சேர்ந்தவர் ஜாகிர் நாயக். மருத்துவரான இவர், இஸ்லாமிய ஆராய்ச்சி நிறுவனம் என்ற அமைப்பை நடத்தி வருகிறார். மதபோதகர். இவர் மீது, வெறுப்பு பேச்சுகள் மூலம் இளைஞர்களை பயங்கரவாத செயல்களுக்கு தூண்டுகிறார் என்பது உட்பட பல்வேறு புகார்கள் எழுந்தன. இதையடுத்து அந்த வழக்குகளில் கைது செய்யப்படுவதில் இருந்து தப்பிக்க, மலேசியாவில் தஞ்சம் அடைந்துள்ளார். கடந்த 3 வருடமாக அங்கு வசித்து வருகிறார், ஜாகீர் நாயக். 

இதற்கிடையே, அங்கு இஸ்லாமியர்கள் கூட்டம் ஒன்றில் பேசிய அவர், மலேசிய இந்துக்கள், இந்திய பிரதமரிடம்தான் அதிக விசுவாசத்துடன் உள்ளனர் என்றார். இது சர்ச்சையை ஏற்படுத்தியது. பின்னர் சீனர்கள் பற்றியும் அவர் சர்ச்சையான கருத்துக்களைத் தெரிவித்தார். இதற்கு மலேசிய மக்களிடையே கடும் எதிர்ப்பு கிளம்பியதை அடுத்து, அவர் மீது சுமார் 115 புகார்கள் கூறப்பட்டன.  இதையடுத்து, மலேசியாவின் மேலகா, ஜோகூர், சிலாங்கூர், பினாங்கு, கெடா, பெர்லிஸ் மற்றும் சரவாக் ஆகிய 7 மாநிலங்களில் அவர், கூட்டம் நடத்தவும் பேசவும் தடை விதிக்கப்பட்டது. 

இந்நிலையில், அவர் மலேசியா முழுவதும் கூட்டம் மதப்பிரசாரக் கூட்டம் நடத்த போலீசார் தடைவிதித்துள்ளனர். இது தொடர்பாக அனைத்து காவல் நிலையங்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. தேசிய பாதுகாப்புக் கருதியும் மத நல்லிணக்கத்தைக் காக்கவும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாக காவல்துறை உயரதிகாரி அஸ்மவாதி அகமது தெரிவித்துள்ளார்.