உலகம்

ஆப்கானிஸ்தான்: காபூல் மசூதியில் பயங்கர குண்டுவெடிப்பு - 10 பேர் உயிரிழப்பு

Veeramani

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் உள்ள மசூதியில் இன்று சக்திவாய்ந்த குண்டு வெடித்ததில் 10 பேர் உயிரிழந்தனர். 20 பேர் காயமடைந்துள்ளதாக தலிபான் செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.

முஸ்லீம்களின் புனித மாதமான ரமலான் மாதத்தின் கடைசி வெள்ளிக்கிழமையான இன்று நூற்றுக்கணக்கானவர்கள் காபூலில் உள்ள கலீஃபா அகா குல் ஜான் மசூதியில் தொழுகைக்காக கூடினர். இந்த சூழலில் சக்திவாய்ந்த குண்டு வெடித்தது, இதனால் உயிரிழப்பு எண்ணிக்கை மேலும் உயரக்கூடும் என்று உள்ளூர் மக்கள் அச்சம் தெரிவிக்கின்றனர்.



இது தொடர்பாக பேசிய தலிபான் உள்துறை அமைச்சக செய்தித் தொடர்பாளர் முகமது நஃபி தாகோர், இந்த பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாகவும், குண்டு வெடிப்புக்கான காரணம் குறித்து உடனடியாகத் தெரியவில்லை என்றும், குண்டுவெடிப்புக்கு யாரும் இதுவரை பொறுப்பேற்கவில்லை என்றும் தெரிவித்தார். ஆப்கானிஸ்தானின் பெரும்பான்மையான சன்னி முஸ்லிம்கள் வசிக்கும் காபூலின் கிழக்கு பகுதியில் இந்த மசூதி உள்ளது.

நாடு முழுவதும் இடைவிடாத குண்டுவெடிப்பு தாக்குதல்கள் தொடர்ந்து நடந்து வருகிறது. இந்த குண்டுவெடிப்புகளில் பெரும்பாலானவற்றிற்கு ஐஎஸ் கோரோசன் அமைப்பு பொறுப்பேற்றுள்ளது.