பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ளவர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடத்தி வருகின்றனர். வேலைவாய்ப்பு, சிறந்த கல்வி, சுகாதார வசதிகள் மற்றும் அடிப்படை சிவில் உரிமைகளை மீட்டெடுக்கக் கோரி மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். குறிப்பாக, கோதுமை மாவு (Flour) போன்ற அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலை வரலாறு காணாத அளவில் உயர்ந்துள்ளது. இதற்கான மானியங்களை பாகிஸ்தான் அரசு குறைத்ததே மக்களின் கோபத்திற்கு முக்கிய காரணம் எனச் சொல்லப்படுகிறது. அடுத்து, இப்பகுதியில் இருந்து உற்பத்தி செய்யப்படும் நீர் மின்சாரம் பாகிஸ்தானின் பிற பகுதிகளுக்குக் குறைந்த விலையில் அனுப்பப்படுகிறது.
ஆனால், அப்பகுதி மக்களுக்குக் கடுமையான மின் கட்டணம் விதிக்கப்படுகிறது. இதற்கு பலத்த எதிர்ப்பு எழுந்துள்ளது. இதையடுத்தே, அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இந்தத் தீவிரப் போராட்டங்களை ஜம்மு காஷ்மீர் கூட்டு அவாமி ஆக்ஷன் கமிட்டி என்ற அமைப்பு ஒருங்கிணைத்து நடத்துகிறது. பாகிஸ்தான் அரசு இந்த அமைப்பிற்குத் தடை விதித்துள்ளது. போராட்டப் பேரணியைத் தடுப்பதற்காக, ஆளும் தரப்பு குறைந்தது 4,000 ரேஞ்சர்ஸ், காவல்துறை மற்றும் எல்லைப் படை வீரர்களைப் பணியில் அமர்த்தியுள்ளது. ஆனாலும், அக்குழு தனது போராட்ட இயக்கத்தைத் தொடர்ந்து முன்னெடுத்து வருகிறது. இந்த நிலையில், நேற்று ஆக்கிரமிப்பு தரப்புப் படைகளுக்கும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் மக்களுக்கும் இடையே நடபெற்ற மோதல்களில் 12 பேர் உயிரிழந்தனர்.
இதையடுத்து, பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள நகரங்கள் சீல் வைக்கப்பட்டுள்ளன. ராவலகோட் நகருக்குள் பத்திரிகையாளர்கள் நுழைவதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே, பாகிஸ்தான் அதிகாரிகள் இந்த மோதல்களை ஆயுதம் ஏந்திய ஜேஏஏசி (JAAC) ஆர்வலர்களின் தாக்குதல்களாகத் தொடர்ந்து சித்தரித்து வருகின்றனர். ஆனால், ஜேஏஏசி இந்தக் குற்றச்சாட்டுகளை நிராகரித்துள்ளது.