உலகம்

குருநானக் 550வது பிறந்தநாளையொட்டி தாய்லாந்தில் சிறப்பு நாணயம் - மோடி வெளியிடுகிறார்

webteam

அரசுமுறை பயணமாக தாய்லாந்து சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. தாய்லாந்தில் பிரதமர் மோடி 3 நாட்கள் பங்கேற்கும் நிகழ்ச்சிகள் குறித்த விவரங்கள் தெரிய வந்துள்ளன.

தாய்லாந்தில் நவம்பர் 3 மற்றும் 4 ஆம் தேதி ஆசியான் மாநாடு மற்றும் கிழக்கு ஆசிய உச்சி மாநாடும் நடைபெறுகிறது. இதில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி மூன்று நாள் பயணமாக தாய்லாந்து சென்றுள்ளார். தலைநகர் பாங்காக் நகரில் அமைந்துள்ள தேசிய உள்விளையாட்டு அரங்கில் தாய்லாந்து வாழ் இந்தியர்கள் பங்கேற்கும் கூட்டத்தில் பிரதமர் மோடி உரையாற்றவுள்ளார். அப்போது தாய் மொழியில் மொழிபெயர்க்கப்பட்ட திருக்குறள் நூலையும் பிரதமர் வெளியிடுகிறார்.

உலகிலேயே அதிக மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ள நூல்களில் மூன்றாம் இடத்தைப் பிடித்த திருக்குறள் தற்போது தாய்லாந்து மொழியிலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. பாங்காக்கில் உள்ள சுலாலாங்கோர்ன் பல்கலைக்கழக பேராசிரியர் டாக்டர் சுவித் விபுல்ஸ்ரீஸ்த் என்பவர் ஆங்கிலத்திலிருந்து தாய்லாந்து மொழியில் மொழிபெயர்த்தார். இவர் ஏற்கனவே டாக்டர் அப்துல் கலாமின் அக்னிச் சிறகுகள் புத்தகத்தையும் தாய்லாந்து மொழியில் மொழிபெயர்த்துள்ளார். 

கடந்த ஓராண்டாக முயற்சித்து மொழிபெயர்க்கப்பட்ட திருக்குறள் புத்தகத்தை தாய்லாந்து தமிழ்ச்சங்கம் வெளியிடுகிறது. இதனை பிரதமர் நரேந்திர மோடி வெளியிட வேண்டும் என தாய்லாந்திலுள்ள இந்திய தூதரகத்திடம் தாய்லாந்து நாட்டு தமிழ்ச்சங்கம் கோரிக்கை விடுத்திருந்தது. இதையடுத்து புத்தகத்தை வெளியிட பிரதமர் ஒப்புக்கொண்டுள்ளதாக இந்திய தூதரகம் தமிழ்ச்சங்கத்திடம் தெரிவித்தது. புத்தக வெளியீட்டு விழாவில் தாய்லாந்து தமிழர்கள் பாரம்பரிய உடை வேட்டி மற்றும் சேலை அணிந்து பங்கேற்கவுள்ளனர்.

இந்த விழாவை தொடர்ந்து 3 ஆம் தேதி நடைபெறும் ஆசியான் உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி பங்கேற்கிறார். இதற்கிடையில் ஆசியான் உறுப்பு நாடுகளின் தலைவர்களை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார். தாய்லாந்து பிரதமர் பிரயுத் ஷானோசாவை பிரதமர் மோடி சந்துத்து உரையாடவுள்ளார். குருநானக்கின் 550வது பிறந்தநாளையொட்டி சிறப்பு நாணயம் ஒன்றை மோடி வெளியிடவுள்ளார். பிராந்திய அளவிலான விரிவான பொருளாதார ஒத்துழைப்பு கூட்டமைப்பில் இந்தியா இணைவதில் உள்ள சிக்கல்களுக்கு தீர்வு காண்பது குறித்தும் இச்சந்திப்புகளில் பிரதமர் விவாதிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.