உலகம்

நவாஸ் ஷெரீபின் தாய் மறைவுக்கு இரங்கல் கடிதம் அனுப்பினாரா பிரதமர் மோடி?

JustinDurai

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீபின் தாய் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து கடிதம் அனுப்பியுள்ளார் பிரதமர் மோடி. 

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீபின் தாய் பேகம் ஷமிம் அக்தர், கடந்த நவம்பர் மாதம் 22-ம் தேதி லண்டனில் உடல்நலக்குறைவால் காலமானார். அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி நவாஸ் ஷெரீப்புக்கு இரங்கல் கடிதம் ஓன்று அனுப்பியதாக பாகிஸ்தானின் தி டான் பத்திரிக்கை செய்தி வெளியிட்டுள்ளது.

இந்த கடிதம் பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் உள்ள இந்திய தூதரகத்தில் இருந்து நவாஸ் ஷெரிப்பின் மகள் மற்றும் பாகிஸ்தான் முஸ்லீம் லீக்-நவாஸ் (பி.எம்.எல்-என்) துணைத் தலைவர் மரியம் நவாஸ் ஆகியோருக்கு அனுப்பபட்டு உள்ளது என அந்த பத்திரிக்கை கூறியுள்ளது.

அந்த கடிதத்தில், ‘அன்புள்ள மியான் சாஹிப், நவம்பர் 22 ஆம் தேதி லண்டனில் உங்கள் தாயார் பேகம் ஷமிம் அக்தரின் மறைவை அறிந்து நான் மிகவும் வேதனை அடைந்தேன். இந்த கடினமான நேரத்தில் உங்கள் துயரத்தில் நானும் பங்கு கொள்கிறேன். ஈடுசெய்ய முடியாத இந்த இழப்பைச் சுமக்க உங்களுக்கும், உங்கள் குடும்பத்தினருக்கும் பலம் அளிக்கும்படி இறைவனிடம் பிரார்த்திக்கிறேன்' என்று பிரதமர் மோடி கூறியுள்ளதாகவும் டான் பத்திரிக்கை தகவல் தெரிவித்துள்ளது.

ஆனால் இந்த கடிதம் குறித்து இந்திய தூதரகம் தரப்பில் இருந்து எந்த அதிகாரபூர்வ தகவலும் வெளிவரவில்லை. 2016 பதான்கோட் தாக்குதலுக்கு பின் இதுபோன்று இந்திய தரப்பில் இருந்து பாகிஸ்தான் தலைவர்களுக்கு கடிதங்கள் அனுப்புவது நிறுத்தப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.