பிரதமர் மோடியின் ஐக்கிய அரபு அமீரக நாட்டு பயணத்தில் அந்நாட்டிற்கும் இந்தியாவிற்கும் இடையே 5 ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டன.
ஜோர்டான், பாலஸ்தீனத்தை தொடர்ந்து பிரதமர் மோடி ஐக்கிய அரபு அமீரகத்திற்கு சென்றுள்ளார். அங்கு அபுதாபியில் பட்டத்து இளவரசர் அல் நெஹாயானுடன் இருதரப்பு உறவு குறித்து விரிவாக ஆலோசனை நடத்தினர். அதன் பின்னர், ரயில்வே, எரிசக்தி, நிதி உள்ளிட்ட துறைகளில் இளவரசருடன் 5 ஒப்பந்தங்களை செய்துகொண்டார். இந்த பயணத்தின் முக்கிய அம்சமாக அபுதாபியில் கட்டப்படவுள்ள இந்து கோயிலுக்கு மோடி இன்று அடிக்கல் நாட்டுகிறார்.
அபுதாபியில் கட்டப்படும் முதல் இந்து கோயில் இது என்பதால் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. அதைத் தொடர்ந்து இன்றைய தினம் துபாய் செல்லும் மோடி அங்கு இந்தியர்களிடையே உரையாற்றவுள்ளார். ஐக்கிய அரபு அமீரகம் சென்றுள்ள மோடிக்கு அபுதாபியில் உற்சாக வரவேற்பளிக்கப்பட்டது. மூவர்ணக் கொடியை குறிக்கும் வகையில் பல்வேறு கட்டடங்கள் மின் விளக்குகள் மின்னின. துபாய் பயணத்தைத் தொடர்ந்து பிரதமர் மோடி இன்றைய தினமே ஓமன் செல்கிறார்.