இத்தாலி நாட்டின் பிரதமாராக 49 வயதான ஜார்ஜியா மெலோனி கடந்த 2022-ம் ஆண்டு அக்டோபர் 22-ம் தேதி பதவியேற்றார். தற்போது வரை அப்பதவியில் இருந்து வரும் மெலோனி, இன்றுடன் இத்தாலியின் பிரதமராக 1413 நாட்களைப் பூர்த்தி செய்திருக்கிறார். இதன் மூலம், இரண்டாம் உலகப்போருக்குப் பிந்தைய இத்தாலிய வரலாற்றில், மிக நீண்ட காலம் தொடர்ச்சியாகப் பதவி வகிக்கும் பிரதமர் என்ற வரலாற்றுச் சாதனையை மெலோனி படைத்துள்ளார். இத்தாலியின் முன்னாள் பிரதமர் சில்வியோ பெர்லுஸ்கோனி 1412 நாட்கள் தொடர்ச்சியாக பதவியில் இருந்ததே சாதனையாக இருந்தது.
இந்தச்சூழலில் தான், இத்தாலி பிரதமர் ஜார்ஜியா மெலோனிக்கு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார் இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், ”இத்தாலி பிரதமர் ஜார்ஜியா மெலோனி, இரண்டாம் உலகப்போருக்குப் பிந்தைய இத்தாலிய வரலாற்றில் மிக நீண்ட காலம் தொடர்ச்சியாகப் பிரதமர் பதவியில் நீடிக்கும் தலைவர் என்ற சாதனையைப் படைத்துள்ளார். எனது நண்பரும் இத்தாலி பிரதமருமான ஜார்ஜியா மெலோனிக்கு எனது வாழ்த்துகள். இந்த வரலாற்றுச் சாதனை இத்தாலி மக்கள் அவர் தலைமை மீது வைத்துள்ள ஆழமான நம்பிக்கையைப் பிரதிபலிக்கிறது" எனத் தெரிவித்துள்ளார்.
மேலும், மெலோனியின் நட்பு இந்தியா - இத்தாலி இடையிலான "சிறப்பு மூலோபாயக் கூட்டாண்மையை" வலுப்படுத்துவதில் முக்கியப் பங்காற்றியுள்ளது என்றும், இரு நாட்டு மக்களின் பிரகாசமான எதிர்காலத்திற்காகத் தொடர்ந்து இணைந்து பணியாற்ற எதிர்பார்ப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.