ஈரான் போர் குறித்த பேச்சுவார்த்தையின்போது பாகிஸ்தான் (Pakistan) ராணுவத் தளபதி ஆசிம் முனீர் (Asim Munir) மற்றும் அந்நாட்டின் தூதுக் குழுவினரைக் கொல்ல இஸ்ரேலிய உளவு அமைப்பான மொசாட் (Mossad) சதித்திட்டம் தீட்டியதாக பிரேசில் (Brazil) தெரிவித்திருப்பது உலகை அதிர்ச்சியடையச் செய்துள்ளது.
அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே நிலவும் போர்ப் பதற்றத்தைத் தணிக்கும் வகையில் மத்தியஸ்தராக பாகிஸ்தான் செயல்பட்டது. கத்தாருடன் (Qatar) பாகிஸ்தானும் இணைந்து நடத்திய இந்தப் பேச்சுவார்த்தை விரைவிலேயே சுமுகத்தை எட்டியது. தவிர, இதன்மூலம் புரிந்துணர்வு ஒப்பந்தமும் மேற்கொள்ளப்பட்டுள்ளது. முன்னதாக, இந்தப் பேச்சுவார்த்தையில் பங்கேற்க பாகிஸ்தான் ராணுவத் தளபதி ஜெனரல் ஆசிம் முனீர் மற்றும் அவரது குழுவினர் சுவீட்சர்லாந்தின் ஜெனீவா (Geneva)நகருக்குச் சென்றிருந்தனர். அப்போது, அவர்களைக் கொலை செய்ய இஸ்ரேல் உளவு அமைப்பான மொசாட், சதித் திட்டம் தீட்டியதாக பிரேசில் நாட்டுப் பத்திரிகையாளரும் புவிசார் அரசியல் நிபுணருமான பெப்பே எஸ்கோபர் (Pepe Escobar) குற்றஞ்சாட்டியிருப்பது உலகளவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் நேரடி உத்தரவின்பேரில் மொசாட், இந்தச் சதித்திட்டத்தைத் தீட்டியதாகவும், அமெரிக்கா-ஈரான் அமைதிப் பேச்சுவார்த்தையில் இஸ்ரேலுக்கு இடம் தராததால் ஏற்பட்ட அதிருப்தியே இதற்குக் காரணம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
எனினும், பாகிஸ்தானின் ராணுவ உளவுத்துறை இந்த சதித்திட்டம் குறித்த மிகவும் நம்பகமான உளவுத் தகவல்களை முன்கூட்டியே கண்டறிந்ததாகவும், அதைத் தொடர்ந்து, ஓமன் (Oman) நாட்டின் தூதர்கள் மூலம் இஸ்ரேலுக்கு பாகிஸ்தான் எச்சரிக்கை விடுத்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார். அந்த எச்சரிக்கையில், "எங்கள் தூதுக்குழுவினர் மீது நீங்கள் (இஸ்ரேல்) கைவைத்தால், இஸ்ரேலை உலக வரைபடத்திலிருந்தே முற்றிலும் அழித்துவிடுவோம்" என்று பாகிஸ்தான் தரப்பில் கூறப்பட்டதாக எஸ்கோபார் தெரிவித்துள்ளார்.
இந்தத் தகவல் சமூக வலைதளங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், பாகிஸ்தான் ஓர் அணுஆயுத நாடு என்பதால் மேலும் இந்தத் தகவல் சர்வதேச அளவில் விவாதப் பொருளானது. எனினும், இதில் எந்தவொரு அதிகாரப்பூர்வ உண்மையும் இல்லை என்று கூறப்படுகிறது. இது ஒரு பிரேசிலிய பத்திரிகையாளரால் தனிப்பட்ட முறையில் எழுப்பப்பட்ட பரபரப்பான குற்றச்சாட்டாகக் கருதப்படும் நிலையில், இந்தச் சதித்திட்டம் அல்லது எச்சரிக்கை குறித்து பாகிஸ்தான் அரசோ, அதன் ராணுவமோ அல்லது இஸ்ரேல் அரசோ இதுவரை எந்தவொரு அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.