உலகம்

கொரோனா தடுப்பூசி சான்றிதழில் ஏன் மோடியின் படம்? வெளிநாடு செல்பவர்களுக்கு அதிகாரிகள் கேள்வி

கொரோனா தடுப்பூசி சான்றிதழில் ஏன் மோடியின் படம்? வெளிநாடு செல்பவர்களுக்கு அதிகாரிகள் கேள்வி

EllusamyKarthik

இந்தியாவில் கொரோனா தடுப்பூசி செலுத்தியவர்களுக்கு கோ-வின் வலைதளத்தின் மூலமாக இந்திய அரசு சான்றிதழ் கொடுத்து வருகிறது. அதில் கீழ் பக்கம் இடது புறமாக பிரதமர் நரேந்திர மோடியின் புகைப்படம் இடம் பெற்றுள்ளது. அது ஆரம்பம் முதலே பலவேறு சர்ச்சைகளுக்கு உள்ளானது. இது தொடர்பாக எதிர்க்கட்சிகளை சார்ந்தவர்கள் கேள்வியும் எழுப்பி இருந்தனர். 

இந்த சூழலில் தற்போது அயல் நாடுகளுக்கு பயணம் மேற்கொள்ளும் இந்தியர்களுக்கு புதுவிதமான சிக்கலை தந்து வருவதாக ஒரு தகவல் கிடைத்துள்ளது. இதை VICE NEWS செய்தியாக வெளியிட்டுள்ளது. அதாவது வெளிநாடுகளுக்கு செல்லும் இந்தியர்கள் தாங்கள் தடுப்பூசி செலுத்தியதற்கான சான்றிதழை IMMIGRATION அலுவலர்களிடம் சரிபார்ப்புக்காக கொடுக்கும் போது சிக்கல் எழுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

பிரதமர் மோடியின் படம் அதில் அச்சிடப்பட்டுள்ளதே இதற்கு காரணம் என சொல்லப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட பயணியின் படத்திற்கு மாற்றாக ஏன் வேறொருவது படம்? ஏதேனும் மோசடி வேலையா இது? என்ற அளவுக்கு IMMIGRATION அலுவலர்கள் கேள்வி எழுப்புகின்றனராம். அதன் பின்னர் இது இந்திய பிரதமர் மோடியின் படம் என சொல்லி அவர்களுக்கு விளக்கம் கொடுத்த பிறகு தான் விமான நிலையத்தை விட்டு வெளியேற அனுமதி அளிக்கப்படுகிறதாம். 

கடந்த ஜூலையில் இந்தியாவை சேர்ந்த பெண் ஒருவர் லண்டன் விமான நிலையத்தில் இந்த குழப்பத்தினால் அலுவலர்களால் காக்க வைக்கப்பட்டுள்ளார். பின்னர் அவர் அந்த படம் தொடர்பான விவரத்தை கொடுத்த பிறகே விமான நிலையத்தை விட்டு வெளியேற அனுமதிக்கப்பட்டுள்ளார். 

இது தொடர்பாக நெட்டிசன்கள் பலரும் சமூக வலைத்தளங்களில் கருத்து தெரிவித்துள்ளனர். மேலும் இந்திய தடுப்பூசி சான்றிதழை உலக நாடுகள் அளித்துள்ள தடுப்பூசி சான்றிதழுடன் ஒப்பிடும் போது முற்றிலும் மாறுபட்டு உள்ளதாகவும் அயல் நாட்டை சேர்ந்தவர்கள் தெரிவித்துள்ளனர். சில நாடுகளில் சிறிய அளவில் மட்டுமே இந்த சான்றிதழ் இருக்கிறதாம்.