பிலிப்பைன்ஸ் எக்ஸ் தளம்
உலகம்

எரிபொருள் தட்டுப்பாடு | இருமடங்கு விலை உயர்வு.. முதல் நாடாக அவசர நிலையை அறிவித்த பிலிப்பைன்ஸ்!

எரிபொருள் தட்டுப்பாட்டால் உலகின் முதல் நாடாக பிலிப்பைன்ஸ் அரசு அவசர நிலை பிரகடனம் செய்துள்ளது.

Prakash J

ஆசிய நாடுகளுக்குத் தேவையான 90 சதவீத எண்ணெய் ஹார்முஸ் ஜலசந்தி வழியாகவே வருவதால், அந்தப் பாதையில் நிலவும் பதற்றம் பிலிப்பைன்ஸ் போன்ற நாடுகளுக்குப் பெரும் சவாலாக மாறியுள்ளது.

மத்திய கிழக்கில் அமெரிக்கா - இஸ்ரேல் - ஈரான் போர், நான்காவது வாரத்தைத் தொட்டிருக்கும் நிலையில், அது மேலும்மேலும் தீவிரமடைந்து வருகிறது. இதற்கிடையே, உலகின் 20 சதவீதம் கச்சா எண்ணெய் வர்த்தகம் நடைபெறும் ஹார்முஸ் நீரிணைப் பகுதியை ஈரான் முடக்கி வைத்துள்ளது. இதன்காரணமாக உலகளவில் எரிவாயு தட்டுப்பாடு ஏற்பட்டிருக்கிறது. இதையடுத்து, மத்திய கிழக்கில் அமைதி திரும்ப வேண்டும் என்று உலக நாடுகள் வலியுறுத்தி வரும் நிலையில், சமீபகாலமாக ஈரானிடம் சுமுகமாகப் பேச்சுவார்த்தை நடத்தப்படுவதாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தெரிவித்திருந்தார்.

டொனால்டு ட்ரம்ப்

மேலும், 5 நாட்களுக்கு ஈரான் மின் உற்பத்தி நிலையங்கள் மீது தாக்குதல் நடத்தப்போவதில்லை எனவும் அவர் உறுதியளித்திருந்தார். ஆனால், இதை ஈரான் மறுத்த நிலையில், ட்ரம்பையும் கேலி செய்திருந்தது. தவிர, இஸ்ரேல் மீதும் தாக்குதலை நடத்தியது. இதனால், மீண்டும் ஈரான் எல்லையில் படைகள் குவிக்கப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில், எரிபொருள் தட்டுப்பாட்டால் உலகின் முதல் நாடாக பிலிப்பைன்ஸ் அரசு, அவசர நிலையை பிரகடனம் செய்துள்ளது. பிலிப்பைன்ஸ் 98% கச்சா எண்ணெயை மத்திய கிழக்கு நாடுகளில் இருந்தே வாங்குவதால், ஈரான் -அமெரிக்கா இஸ்ரேல், இடையேயான போரால் பெட்ரோல், டீசலின் விலை அந்நாட்டில் இருமடங்கு அதிகரித்தது. இதன் நேரடி விளைவாக, பிலிப்பைன்ஸ் நாட்டில் எரிபொருள் இருப்பு வேகமாகக் குறைந்து வருவதுடன், அதன் விலையும் முன்னெப்போதும் இல்லாத வகையில் விண்ணைத் தொட்டுள்ளது. இந்த இக்கட்டான சூழ்நிலையைச் சமாளிக்க, அந்நாட்டு அதிபர் ஃபெர்டினாண்ட் மார்கோஸ் ஜூனியர், நாடு முழுவதும் தேசிய எரிசக்தி அவசர நிலையை பிரகடனம் செய்துள்ளார்.

Philippine

பெட்ரோல் மற்றும் டீசல் விலைகள் போர் தொடங்குவதற்கு முன்பு இருந்ததைவிட தற்போது இரண்டு மடங்காக அதிகரித்துள்ளன. நாட்டின் தற்போதைய கையிருப்பு வெறும் 45 நாட்களுக்கு மட்டுமே போதுமானது என்று அதிகாரிகள் எச்சரித்துள்ளதால், நிலைமையைக் கட்டுக்குள் கொண்டுவர இந்த அதிரடி முடிவு எடுக்கப்பட்டுள்ளது. எரிபொருள் இருப்பை உடனடியாக அதிகரிக்க, பெட்ரோலியப் பொருட்களை நேரடியாகக் கொள்முதல் செய்யும் அதிகாரத்தை அரசு தனது கையில் எடுத்துள்ளது. மேலும், எரிவாயு விலை உயர்வால் மின் கட்டணம் அதிகரிப்பதைத் தவிர்க்க, தற்காலிகமாக நிலக்கரி சார்ந்த மின் உற்பத்தி நிலையங்களையே அதிகம் பயன்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. எரிபொருள் பயன்பாட்டைக் குறைக்கும் நோக்கில், அரசு ஊழியர்களுக்கு வாரத்திற்கு நான்கு நாட்கள் மட்டுமே வேலை என்ற புதிய நடைமுறை அமல்படுத்தப்பட்டுள்ளது. ஆசிய நாடுகளுக்குத் தேவையான 90 சதவீத எண்ணெய் ஹார்முஸ் ஜலசந்தி வழியாகவே வருவதால், அந்தப் பாதையில் நிலவும் பதற்றம் பிலிப்பைன்ஸ் போன்ற நாடுகளுக்குப் பெரும் சவாலாக மாறியுள்ளது.